சுவிற்சர்லாந்தை எல்லோரும் விரும்ப காரணம் என்ன தெரியுமா.?? சுவிற்சர்லாந்து என்ற பெயரை கேட்டதும் நம் வாழ்நாளில் ஒரு நாளாவது அந்த நாட்டுக்கு சென்று வந்திட வேண்டும் என்பது உலகம் எங்கும் பரந்து வாழுகின்ற ஒவ்வொருவருடைய வாழ்நாள் கனவாகவே இருக்கிறது.
அப்படி என்னதான் இருக்கிறது சுவிற்சர்லாந்தில் என்ற கேள்விகள் வரும் போது.. இயற்கை.. அமைதி.. நடுநிலமை.. சுத்தம்.. அனைவருக்கும் சமமான சட்டம்.. என பல்வேறு விடயங்களை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகலாம்…
சுவிற்சர்லாந்தில் அப்படி என்னதான் இருக்கிறது..?
தமிழகத்தில் இருந்து சுவிற்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த ஒரு தமிழர் ‘சுவிற்சர்லாந்தில் அப்படி என்னதான் இருக்கிறது’ என்ற தலைப்பில் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றுக்;கு எழுதிய பதிவுதான் இது…
அப்படி சுவிசில் என்னதான் இருக்கிறது? என்ற எண்ண ஓட்டம் இதனைப் படிக்கும் உங்களுக்கு வந்திருக்கக் கூடும். நியாயந்தானே! உங்கள் எண்ணத்திற்குப் பதிலளிக்க வேண்டுவது எனது கடமையல்லவா? எனது அனுபவித்திலிருந்து இங்குள்ளவற்றை எழுதுகிறேன்.
– பெப்ரவரியில் ஆரம்பிக்கும் வெயில்,ஜூனையும் தாண்டித் தொடர்வதும்,குளித்து விட்டுக் குளியலறையை விட்டு வெளியே வருமுன்னே வியர்க்க ஆரம்பிப்பதும்,வழக்கத்திற்கு மாறாக ஏ.சி.,யை எப்போதும் ஓட விடுவதும் என்று இவ்வருடம் ஆதவன் நம்மை ஆட்டிப்படைத்து விட்டானே. அதிலிருந்து விடுதலை. குளித்து விட்டு ஃபேனுக்குக் கீழே நிற்பது போன்ற ஓர் உணர்வு இங்கே.
சுவிற்சர்லாந்தில் அப்படி என்னதான் இருக்கிறது..?
-இங்கு குளிர் காலத்திலும் கொசுத் தொல்லை இல்லை. இங்கு அவருக்கு ‘என்ட்ரி’கிடையாது. கொசுவார் தொல்லையில்லாமல், போர்த்திக் கொண்டு உறங்குவது போன்ற சுகம் உலகில் வேறேனும் உண்டா?- சொல்லுங்கள்!
-சைக்கிளிங்,வாக்கிங்,ரன்னிங் போவதற்கென்றே தனிப் பாதைகள்! 24 மணி நேரத்தில் எப்பொழுது உங்களுக்கு விருப்பமோ,அந்த நேரத்தில் நீங்கள் தைரியமாகச் செல்லலாம்-இரவு 12 மணிக்குக் கூட!
-சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரும் சட்டத்தை மதித்து நடக்கிறார்கள்.சிறு சாலைகளைக் கடக்கச் சாலை ஓரத்தில் நின்றாலே போதும்.அத்தனை ஓட்டிகளும் தங்கள் வாகனத்தை நிறுத்தி வழி விடுகிறார்கள்.மனித உயிர்களை மகத்தாய் மதிக்கிறார்கள்.
– சாலைகள் அனைத்தும் மேடு,பள்ளமின்றி, ஹோல்கள் (hole) இருப்பதே தெரியாமல் நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளன.
-வெளியே கிளம்பி விட்டால், தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ, ஒரு புன்முறுவலையோ, ஜெர்மனியில் வணக்கத்தையோ சொல்லி நம்மைக் கடந்து சென்றாலும், மனதில் தங்கி விடுகிறார்கள்.
-மலைகள் பனிப்போர்வையைப் போர்த்திக் கொண்டுள்ளன அல்லது பசுமையைப் போர்த்திக் கொண்டுள்ளன.
-தூய்மையான காற்று(pollution free air),மனித வாழ்வுக்குகந்த சீதோஷ்ண நிலை(fair climate),அமைதி தவழும் சமூகம் ஆகியவையே பலரையும் இந் நாட்டிற்கு ஈர்க்கின்றன. இங்கு சிட்டிகளில் வாழ்வதைவிடக் கிராமங்களில் வாழ்வதையே அனைவரும் விரும்புகின்றனர். நமது மகாத்மா ‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’என்றார். சுவிஸ் கிராமங்கள் அதனை நிரூபிக்கின்றன.
சுவிற்சர்லாந்தில் அப்படி என்னதான் இருக்கிறது..?
-ஜனவரியில் நாங்கள் இங்கிருந்தபோது பூர்வாங்க வேலைகள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டன. இப்பொழுது திரும்பி வந்து பார்த்தால், பாலமும், கட்டிடங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. நம்மூரில் பாலங்கள் கட்டுவது,டி.வி.சீரியல்கள் போல!
-மக்கட்தொகை அதிகமென்பதையும்,வளரும் நாடு என்பதையும் பலர் காரணமாகக் கூறியே நம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் அதே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கப் போகிறோம்?
!உலகின் பல நாடுகள் மக்கட்தொகையை மகத்தானதாக மதித்து அதனைப் பெருக்க வழிதேடி வருகையில், உள்ளதை ஒழுங்காகப் பயன்படுத்தாமல் கோட்டை விட்டு வருகிறோம்.உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட எழுச்சி மிக்க நாடு இந்தியா என்பதை நாம் நிரூபிக்கும் காலம் வந்து விட்டது.
-சாலை ஓரங்களிலேயே மலர்கள் மலர்ந்து நம்மைக் கவர்கின்றன. பழங்கள் பழுக்கின்றன. அவற்றை இங்குள்ள மக்கள் ரசிக்கிறார்களே தவிர,அவற்றின் நிழலைக் கூடத் தொடுவதில்லை.
சுவிற்சர்லாந்தின் அழகை வாரம் ஒரு முறை ரசிக்கலாம் வாங்க..!
இவற்றையெல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளக் காரணம் என்னவெனில், வசதியுள்ளவர்கள் அடுத்த கோடையிலாவது ஸ்விஸ் வரத் திட்டமிடுங்கள். பணத்தைச் சேமியுங்கள்; பாஸ்போர்ட் இல்லாதவர்கள் உடனடியாக வாங்குங்கள்; விசாவுக்கு அப்ளை செய்யுங்கள்;விசா வந்ததும் எந்த ஏர்லைன்ஸ் என்பதைத் தேர்வு செய்து டிக்கட்டைப் போடுங்கள். வந்து என்ஜாய் பண்ணுங்கள் சுவிசை! ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, கியாரண்டி..
சுவிற்சர்லாந்தின் அழகை வாரம் ஒரு முறை ரசிக்கலாம் வாங்க..!
சரி! வசதி படைத்தவர்கள் பறக்கலாம்;பலவற்றையும் அனுபவிக்கலாம்! எங்களைப் போன்ற சாதாரணமானவர்கள் வயிற்றுப் பாட்டுக்கே வழி தெரியாமல் அல்லாடுகையில், நீர் சொல்வதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்று உங்களில் பலர் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது. கவலையை விடுங்கள்!உங்களுக்காக இங்கு நான் பார்ப்பனவற்றைப் பார்த்தபடியே எழுதுகிறேன்! தூய்மையைப் பேண இங்கு செயல்படுத்தப்படும் முறைகள், வீடுகளின் அமைப்பும் வாழ்க்கை முறையும், இங்குள்ள போக்குவரத்து முறை என்று பலவற்றையும் பார்ப்போமே!-சற்று விரிவாக!
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.