சுவிட்சர்லாந்தில் செயற்கை நிலநடுக்க ஆய்வு ஆரம்பம்
இயற்கை பேரிடர்களில் முக்கியமான ஒன்றான நிலநடுக்கத்தை முன்கூட்டியே துல்லியமாக கணிக்கவும், அதை கட்டுப்படுத்தவும் மனிதர்களுக்கு இன்னும் முழுமையான திறன் கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மிகச் சிறியதாக இருப்பதால், பொதுமக்கள் அவற்றை உணர முடியாத நிலையும் உள்ளது.
இந்த நிலையில், சுவிட்சர்லாந்தின் டிசினோ கன்டோனில் அமைந்துள்ள பெட்ரெட்டோ பகுதியில், நிலத்தடியில் உள்ள ஒரு ஆராய்ச்சி சுரங்கத்தில் செயற்கையாக நிலநடுக்கங்களை உருவாக்கும் திட்டத்தை அறிவியலாளர்கள் முன்னெடுக்க உள்ளனர். இந்த ஆய்வு, நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன் நிலத்தின் உட்புறத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன, அதனை கட்டுப்படுத்த அல்லது அதன் தாக்கத்தை குறைக்க எந்த வழிகள் உள்ளன என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படுகிறது.

அறிவியலாளர்கள் உருவாக்க திட்டமிட்டுள்ள நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் மிகவும் குறைந்த அளவான 1 ஆக இருக்கும் என்பதால், பொதுமக்களுக்கு அல்லது சுற்றுப்புற சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த பரிசோதனை நடைபெறும் நேரத்தில் அந்த சுரங்கத்திற்குள் மனிதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
இந்த ஆய்வு முழுவதும் தொலைநிலையிலிருந்து, குறிப்பாக சூரிக் நகரிலிருந்து ரிமோட் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுப்படுத்தப்பட உள்ளது. உலகளவில் நிலநடுக்கங்களைப் பற்றிய அறிவை மேம்படுத்தும் வகையில் இந்த முயற்சி முக்கியமானதாக கருதப்படுகிறது.