வெளிநாட்டவர்களுக்கு சொத்து வாங்க கடும் கட்டுப்பாடு – சுவிஸ் அரசு திட்டம்
சுவிட்சர்லாந்தில் வீட்டு வசதி பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டவர்கள் சொத்து வாங்குவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அரசு முன்வந்துள்ளது. வீட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைத்து, உள்ளூர் குடியிருப்பாளர்களுக்கு வசதிகளை அதிகரிக்கும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Federal Council முன்வைத்துள்ள திட்டத்தின் படி, நிரந்தர குடியிருப்பு வீடுகளை வாங்குவதற்கான விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படவுள்ளன. அதேசமயம், விடுமுறை வீடுகளுக்கான ஆண்டுதோறும் வழங்கப்படும் அனுமதிகள் பாதியாகக் குறைக்கப்பட உள்ளன. மேலும், வணிக நிலசொத்துகள் மற்றும் சொத்து முதலீட்டு நிதிகளில் வெளிநாட்டவர்களின் முதலீட்டிற்கும் வரம்புகள் விதிக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறிய பின்னர், அவர்கள் வைத்திருக்கும் முதன்மை வீடுகளை இரண்டு ஆண்டுகளுக்குள் விற்க வேண்டிய கட்டாயமும் அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் மூலம் சொத்து சந்தையில் நடைபெறும் ஊக முதலீடுகளை கட்டுப்படுத்தி, நாட்டின் குடியிருப்பாளர்களுக்கு அதிக வீடுகளை கிடைக்கச் செய்வதே அரசின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொகை அதிகரிப்பு தொடர்பான முக்கிய வாக்கெடுப்பை முன்னிட்டு இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த திட்டங்கள் பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்புகளின் கருத்துகளை பெறும் ஆலோசனை கட்டத்தில் உள்ளன.