சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் ‘AI Deep Fake Video’ செயற்கை நுண்ணறிவு என்னும் ஒரு விடயம் குறித்த அறிவு பரவியதுமே, அதைப் பயன்படுத்தி பிரபலங்களைப் போல போலியாக வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பட்டு வரும் விடயம், பலருக்கும் பெரும் தொல்லையாக அமைந்துள்ளது.
சமீபத்தில், இந்திய நடிகைகளான ராஷ்மிகா, ஆலியா பட், கஜோல், கதிரினா கைஃப் ஆகிய நடிகைகளின் போலி வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்ட விடயம் இந்திய அரசியல்வாதிகள் தலையிடும் அளவுக்குச் சென்றுள்ளது.
இந்நிலையில், சுவிஸ் பெண் அரசியல்வாதி ஒருவரின் போலி வீடியோ ஒன்று வெளியிடப்பட்ட விவகாரம், சுவிஸ் அரசியலைக் கலக்கி வருகிறது.
அக்டோபர் மாதம் 16ஆம் திகதி, சமூக ஊடகமான எக்ஸில், சுவிஸ் அரசியல்வாதியான Sibel Arslan என்னும் பெண்ணின் போலி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. Sibel, பசுமைக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
அவரது கருத்துக்களுக்கு முற்றிலும் மாறான விடயங்களை அவர் பேசுவதுபோல் அந்த வீடியோ அமைக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றம் அதிரடி
விசாரணையில், சுவிஸ் மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Andreas Glarner என்பவர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த வீடியோவை போலியாக உருவாக்கியிருந்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, சுவிஸ் நீதிமன்றம் ஒன்று, தற்போது Andreas Glarner, 3,842.50 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் திகதி, அந்த போலி வீடியோவை அகற்றவேண்டும் என்றும், அதை பகிரக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.