சூரிச்சில் இலங்கைத் தமிழருக்கு கராத்தே “ஷிஹான்” பெருமை
சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசன், கராத்தே கலையின் மிக உயர்ந்த பட்டங்களில் ஒன்றான “ஷிஹான்” பட்டத்தை பெற்றுள்ளார். சூரிச்சில் நடைபெற்ற ஜப்பான் இதோசுகாய் கராத்தே அமைப்பின் சர்வதேச செயலமர்வைத் தொடர்ந்து இந்த விருது வழங்கப்பட்டது.
இரண்டு நாள் நிகழ்வாக நடைபெற்ற இந்த சர்வதேச பயிற்சி மற்றும் தர நிர்ணய நிகழ்ச்சியின் நிறைவாக கருப்புப்பட்டி வழங்கும் விழாவில், ஜப்பான் இதோசுகாய் அமைப்பின் நான்காவது தலைமுறை தலைமை பயிற்சியாசிரியரின் முன்னிலையில் இந்த பட்டம் வழங்கப்பட்டது. இதுவரை இந்த “ஷிஹான்” பட்டம் பெரும்பாலும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உயர்நிலை பயிற்சியாளர்களுக்கே வழங்கப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக வெளிநாட்டவரான ஒருவருக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சுவிட்சர்லாந்தில் ஜப்பான் இதோசுகாய் கராத்தே அமைப்பின் பிரதிநிதியாகவும் தலைமை ஆசிரியராகவும் செயல்படும் விபுலானந்தன் கௌரிதாசன், சுவிஸ் கராத்தே சம்மேளனத்தின் தேசிய நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிகழ்வில் சுவிட்சர்லாந்தின் சென்ட்கேலன் நகர அரசியல் மற்றும் சமூகத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அவரது மாணவர்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர்.

“ஷிஹான்” பட்டம் என்பது கராத்தே துறையில் நீண்டகால அனுபவம், சிறந்த தொழில்நுட்ப திறன், ஆழமான அறிவு மற்றும் வழிகாட்டும் தலைமைத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்தியவர்களுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமாகும். இது ஒரு பட்டமோ பதவி உயர்வோ மட்டுமல்லாமல், அந்தக் கலையின் வளர்ச்சிக்காக அவர் செய்த பங்களிப்பையும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கும் முக்கியமான சான்றாகக் கருதப்படுகிறது.
இந்த விருது, சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் சமூகத்திற்கும் பெருமை சேர்த்ததோடு, உலக அரங்கில் தமிழர்களின் திறமையை மீண்டும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.