சுவிட்சர்லாந்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடிப்படை கல்வி திறன்களில் பின்தங்கியுள்ளனர்
சுவிட்சர்லாந்தில் சுமார் 8 லட்சத்து 44 ஆயிரம் மக்கள் வாசிப்பு, கணிதம் மற்றும் பிரச்சினை தீர்க்கும் திறன்களில் குறைந்த நிலை திறன் கொண்டுள்ளனர் என்று அந்த நாட்டின் புள்ளியியல் அலுவலகம் (FSO) வியாழக்கிழமை வெளியிட்ட ஆய்வில் தெரிவித்துள்ளது.
16 முதல் 65 வயதுக்குள் உள்ள மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, மொத்த மக்கள்தொகையில் சுமார் 15 சதவீத பேர் அடிப்படை கல்வி மற்றும் திறன்களில் சிரமம் அனுபவிப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அந்தக் குழுவில் உள்ளவர்களில் 38 சதவீதம் சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகளில் ஒன்றான ஜெர்மன், பிரெஞ்சு அல்லது இத்தாலிய மொழிகளை தங்களது முதல் மொழியாகப் பேசுவோர். மீதமுள்ள 62 சதவீதம் வெளிநாட்டு மொழியில் தேர்வு எழுத வேண்டியிருந்ததால், அவர்களின் மதிப்பெண்கள் குறைந்தன என அறிக்கை கூறுகிறது.

அறிக்கை மேலும், இந்தத் திறன்கள் குறைவாக உள்ளவர்கள் மற்றவர்களை ஒப்பிடும்போது தொழில்வாய்ப்புகளில் பங்கேற்கும் விகிதம் குறைவாகவும், வருமானம் குறைவாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதேபோல, அவர்கள் அனுபவிக்கும் வாழ்க்கைத் தரமும் நலனும் சராசரியை விட குறைவாகவே உள்ளதாகவும், சமூகச் செயல்பாடுகளில் ஈடுபாடு குறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து போன்ற உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் பெற்ற நாட்டில் இத்தகைய நிலைமை கவலைக்கிடமானதாகும். அரசாங்கம் மற்றும் கல்வி அமைப்புகள் இணைந்து, அடிப்படை திறன்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சிகள் மற்றும் கல்வித் திட்டங்களை விரைவாக விரிவுபடுத்துவது அவசியமாகும்.
FSO வெளியிட்ட இந்த அறிக்கை, கல்வி மற்றும் மொழித்திறன்களில் சமநிலை இல்லாமை சமூகப் பங்குபற்றுதலிலும், பொருளாதார வாய்ப்புகளிலும் நேரடியான தாக்கம் ஏற்படுத்தும் என்பதைக் குறிப்பிடும் முக்கியமான எச்சரிக்கை என கருதப்படுகிறது.