சுவிஸ் வாழ் தமிழர்களே எச்சரிக்கை “BLACK FRIDAY” மோசடிகள்..!! இன்று 24 நவம்பர் ‘Black Friday’. பொருட்களின் விலைகளை குறைத்து விற்பனையை அதிகரிக்க வர்த்தகர்களுக்கும், விலை கூடிய பொருட்களை மலிவு விலையில் கொள்வனவு செய்துகொள்ள நுகர்வோருக்கும் வழிசமைக்கும் வணிக தினமாக கருதப்படுகிறது.
அமெரிக்காவில் பிறந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதியான ‘Black Friday’ எனும் வணிக நிகழ்வு, வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களைத் தாண்டி மோசடிக்காரர்களின் தினமாகவும் அண்மைக்காலமாக மாறியுள்ளது.
உதாரணமாக ஏனைய நாட்களில் 50 பிராங்குகள் பெறுமதியான ஒரு பொருளை 80 பிராங்குகளாக உயர்த்திப் பதிவிட்டு பின்னர் 40வீதம் 30வீதம் விலைக் கழிவு என விற்பனை செய்யும் மோசடிகளும், விலையுயர்ந்த நிறுவனங்களின் இலைச்சினைகளை போலியான பொருட்களில் பதிவிட்டு விலைக்கழிவில் விற்பனை செய்யும் மோசடிகளும் நடைபெறுகிறது.
இவற்றிற்கும் மேலான மோசடிகள் ‘Black friday’ காலத்தில் இணையத்தள விற்பனையில் மிகஅதிகமாக அண்மைக்காலமாக நடைபெறுகிறது. கவர்ச்சிகரமான விளப்பரங்களுடன் உலாவரும் போலியான இணையத்தளங்கள், மக்கள் பொருட்களை வங்கியட்டையில் பணம் செலுத்தி வாங்கிய பின்னர் பொருட்களை அனுப்பாமலே இணையத்தளம் காணாமல் போகிறது.
இது மாத்திரமின்றி இன்றைய இளம் சமுதாயத்தினரில் பெரும்பான்மையானோர் இணையத்தளங்களிலையே தமது பொருட்களை வாங்குவதில் அதிக நாட்டம் காட்டுகிறார்கள். எனினும் ஒரு சிலர் தற்போது “கறுப்பு வெள்ளி” விற்பனை தொடர்பாக விழிப்புணர்வு அடைந்திருப்பதாக, சுவிட்சர்லாந்தின் சந்தை மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
எனவே ஆடம்பரமான விளம்பரங்களில் மயங்கிப் போகாமல், விழிப்புடன் இருக்க வேண்டியது மக்களின் நிலையாகும்.
கருப்பு வெள்ளி போன்ற ஆன்லைன் ஷாப்பிங் பற்றி பலர் சந்தோசப்பட்டாலும் இன்னொமொரு ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்டவர்களில் ஐந்தில் நான்கு பேர் அதாவது 85 சதவீதமானவர்கள் மோசடிகளை பற்றி கவலைப்படுவதில்லை என தெரியவந்துள்ளது. பத்தில் ஒருவர் அதாவது 11 வீதமானவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில், போலி ஆன்லைன் கடைகள் அல்லது முன்பதிவு தளங்களில் நடக்கும் கறுப்புவெள்ளி ஆன்லைன் மோசடிகளில் பலியானவர்களாக தெரியவந்துள்ளது.
இந்த கறுப்பு வெள்ளி ஆன்லைன் மோசடிகள் பற்றி பல்வேறு அமைப்புகளும் ஆய்வு நிறுவனங்களும் இன்றும் ஆய்வுகளையும், விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டுதான் வருகின்றன. இது இப்படி இருக்க, சுவிட்சர்லாந்தில் இந்த கறுப்புவெள்ளி கொள்வனவு மோசடி வேறு விதமாகவும் இடம்பெறுவதாக பிரபல இணையம் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதாவது ஆன்லைன் மூலம், கறுப்புவெள்ளி தள்ளுபடியில் பொருட்களை பெரும்பான்மையானோர் தங்களது வீட்டு விலாசத்துக்கு டெலிவரி செய்யும்படியே மேற்கொள்ளுகின்றனர். அவ்வாறு அவர்களது ஆடர் செய்த பொருட்கள் வீட்டிற்கு வரும்போது வீட்டில் உரிமையாளர் இல்லையென்றால் டெலிவரி செய்பவர் வீட்டின் அல்லது வாசல் கதவில் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு போய்விடுகிறார்கள்.
இவ்வாறு சுவிட்சர்லாந்தின் பல குடியிருப்புகளில், பல வீடுகளில் ஆன்லைனில் ஆடர் செய்த பொருட்கள் வீட்டின் முன் கிடப்பதை நீங்களே கவனித்திருக்கலாம். அல்லது உங்கள் பொருட்களும் இவ்வாறு நீங்கள் இல்லாத நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டிருக்கலாம்.
இந்த சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் ஒரு கும்பல், வீடுகளுக்கு முன் டெலிவரி செய்யப்பட்டு கிடக்கும் பார்சல்களை திருடுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு கடந்த காலங்களிலும் பல முறைப்பாடுகள் கிடைத்தாலும், தற்போது இது அதிகரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் இருந்து தப்பிக்க நீங்கள் மாற்று வழிகளை பின்பற்ற வேண்டும் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேர்ன் கன்டோனல் போலீசாரின் அறிக்கை படி, ஏப்ரல் மற்றும் டிசம்பர் 2022 க்கு இடையிலான காலப்பகுதியில் 287 பார்சல் திருட்டுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் முடிந்தவரை பார்சல் திருட்டைத் தடுக்க, “சுவிஸ் போஸ்ட்” தமது வாடிக்கையாளர்களுக்கும் அறிவுறுத்துகிறது.
‘உங்கள் பார்சல்களை அஞ்சல் பெட்டியில் வைக்கவும், அல்லது முடிந்தவரை வீட்டு வாசலில் இருக்கும் உங்கள் பொதிகளை விரைவாக உள்ளே எடுக்கவும்’ என கேட்டுக்கொண்டுள்ளது. கன்டோன் சுக் போலீசாரும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது கறுப்புவெள்ளி ஆன்லைன் ஆடர்களின் போது மாத்திரம் அல்லாமல் கிறிஸ்துமஸ் காலங்களிலும் அதிகமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ்போஸ்ட் நிறுவனம் இவ்வாறான திருட்டுகளில் இருந்து தப்பிக்க “பிக் போஸ்ட்” என்ற முறையை பயன்படுத்துமாறும் வாடிக்கையாளர்களை அறிவுறுத்துகிறது. மேலும் பார்சலை டெலிவரி செய்யும் போது நீங்கள் வீட்டில் இல்லை என்றால், பக்கத்து வீட்டுக்காரரிடம் பார்சலை விட்டுச் செல்லுமாறு குறிப்பிடாலம் எனவும் காவல்துறை அறிவுறுத்துகிறது.
கருப்பு வெள்ளியன்று உங்களின் ஆடர்செய்யப்பட்ட பார்சல்கள் காணாமல் போயிருந்தால் தபால் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறீர்கள். மேலும் உங்களுக்கு ஒரு திருட்டு இடம்பெற்றுவிட்டதாக சந்தேகம் இருந்தால், ஒரு அறிக்கையை தாக்கல் செய்யலாம் அல்லது காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடு தெரிவிக்கலாம் எனவும் சுவிஸ்போஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த செய்தி சுவிட்சர்லாந்தில் ஆன்லைனில் ஆடர் செய்து இவ்வாறான சம்பவங்களை எதிர்கொண்ட எதிர்கொள்ளப்போகின்ற பல தமிழர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கலாம். எனவே உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளுக்கும் இந்த வீடியோவை தயவுசெய்து செயார் பண்ணவும்.