ஆர்காவ் மாநிலத்தில் உள்ள Suhr பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் A1-Zubringer வீதியில் பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மீது இன்னுமொரு கார் அதிவேகமாக வந்து மோதியதில் இரு கார்களும் நொறுங்கிப்போனது.
பயங்கரமாக இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தின் போது உதவிகள் கிடைக்க மிக தாமதமானதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நேரில் கண்ட சாட்சிகளை ஆர்காவ் கன்டோனல் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த விபத்து ஜனவரி 30, 2023 திங்கட்கிழமை மதியம், Suhr அருகிலுள்ள A1-Zubringer சாலையில் இடம்பெற்றுள்ளது. பி.ப. 2-30 மணிக்குப்பிறகு பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓப்பல் ரக கார் ஒன்றின் மீதே மிக வேகமாக வந்த மற்றைய கார் மோதியுள்ளது. இதனால் மோதலுக்கு உட்பட்ட கார் பல மீற்றர்கள் தள்ளி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆர்காவ் போலீசாருக்கு தகவல் கிடைத்தமையை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார்கள். அங்கு சென்று பார்த்த போது விபத்துக்கு உள்ளாகிய கார் ஒன்றுக்குள் மயங்கிய நிலையில் 66 வயது முதியவர் ஒருவர் சிக்கியிருப்பதை கண்டார்கள்.

உடனடியாக அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்ட போதும் குறித்த நபரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மற்றைய காரின் ஓட்டுனரான 49 வயது மதிக்கத்தக்க நபர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஆம்புலன்ஸ் அவரை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என ஆர்காவ் கன்டோன் போலீசார் தெரிவித்தார்கள். மேலும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளையும் போலீசார் தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த கோர விபத்து சம்பவத்தினால் பல மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.