வெளட் கன்டோனில் UBS வங்கி ATM வெடித்துத் தகர்க்கப்பட்டது — கொள்ளையர்கள் மாயம்
வெளட் கன்டோனில் அமைந்துள்ள Gland நகரில் உள்ள UBS வங்கியின் ஏடிஎம் இயந்திரம், அதிகாலை நேரத்தில் மர்ம கும்பலால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அதிகாலை 4.25 மணிக்குள் மூன்று பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக அருகில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார். வெடிப்பின் பின்னர், கொள்ளையர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு காரில் தப்பிச் சென்ற காட்சிகள் உள்ளூர் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.
சுவான்சிக் மினுட்டன் (20minutes) வெளியிட்ட தகவலின் படி, சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியாளர்கள், காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து சூழலைக் கட்டுப்படுத்தினர். முன்னெச்சரிக்கையாக ஒரு ஆம்புலன்ஸும் அழைக்கப்பட்டது.
வெளட் கன்டோன் காவல்துறை, ஏடிஎம் இயந்திரம், வெடிப்புச் சாதனத்தின் உதவியால் உடைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. இன்னும் கொள்ளையர்கள் எவ்வளவு பணத்தை எடுத்துச் சென்றார்கள் என்பதில் தெளிவான தகவல் இல்லை. கட்டிடத்தின் ஓர் பகுதி கடுமையான சேதத்தை சந்தித்தாலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையர்கள் எந்த திசையில் தப்பிச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் இன்னும் காவல்துறையின் பிடியில் இல்லை. இந்த சம்பவம் கடந்த சில ஆண்டுகளில் சுவிஸில் ஏடிஎம் வெடிப்புகள் அதிகரித்து வருவதை மீண்டும் நினைவூட்டுகிறது, குறிப்பாக வெளிநாட்டு குழுக்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் பெரும்பாலும் எழுகின்றன.
இந்த வழக்கில் விசாரணை, கூட்டாட்சி காவல்துறை (Fedpol) மற்றும் வெளட் கன்டோன் காவல்துறை இணைந்து, கூட்டாட்சி வழக்கறிஞரின் மேற்பார்வையில் நடத்தப்படுகிறது.
சம்பவத்தைப் பற்றி தகவல் வழங்கக்கூடிய சாட்சிகளை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. ஏதேனும் தகவல் உள்ளவர்கள் 021 343 15 10 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
© Kapo VD