சுவிட்சர்லாந்தில் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் மீறல்
சுவிட்சர்லாந்தில் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீறும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இவை சவுனா இறக்குமதி மற்றும் கருவிப் பாகங்கள் ஏற்றுமதி ஆகியவற்றை உள்ளடக்கியவை. உக்ரைன் போர் தொடங்கிய 2022ஆம் ஆண்டு முதல், பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம் (Seco) சுமார் 700 சந்தேகத்திற்கிடமான தடை மீறல் வழக்குகளை பதிவு செய்துள்ளது.
“சொண்டாக்ஸ்சைட்டுங்” செய்தித்தாளின் கோரிக்கையின் பேரில்பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம் தெரிவித்ததாவது: இதுவரை 77 வழக்குகள் தொடங்கப்பட்டு, 65 வழக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் 26 வழக்குகளில், பெரும்பாலும் அஜாக்கிரதையான நடத்தை காரணமாக, அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த மீறல்கள் பெரும்பாலும் சுங்கத் துறையால் கண்டறியப்பட்டவை.
மீறல்கள் வெவ்வேறு வகைகளைச் சேர்ந்தவை. விதிக்கப்பட்ட அபராதங்கள் 300 முதல் 5,000 பிராங்குகள் வரை இருந்தன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மூன்றில் இரு பங்கு இறக்குமதி தொடர்பானவை, மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதி தொடர்பானவை. இரண்டு பெரிய வழக்குகள் கூட்டாட்சி வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

பெலாரஸில் இருந்து 4,000 பிராங்கு சவுனா தடுத்து நிறுத்தம்
மீறல்களின் வேறுபாடுகளை “சொண்டாக்ஸ்சைட்டுங்” செய்தித்தாள் பல வழக்குகள் மூலம் விளக்கியுள்ளது. உதாரணமாக, 2023ஆம் ஆண்டு ஜெனிவா சுங்கத் துறை, பெலாரஸில் இருந்து வந்த 4,000 பிராங்கு மதிப்பிலான சவுனாவை தடுத்து நிறுத்தியது.
சவுனாவை ஆர்டர் செய்த சுவிஸ் நிறுவனம், இந்த இறக்குமதி தடைகளால் பாதிக்கப்படாது என நம்பியது. ஆனால், ரஷ்யாவுடன் பெலாரஸும் தடை பட்டியலில் உள்ளது, ஏனெனில் அந்நாடு அதிபர் லுகாஷென்கோவின் ஆட்சியில் கிரெம்ளினுடன் நெருக்கமாக உள்ளது. இதனால், சவுனா ஆர்டர் செய்த சுவிஸ் நிறுவனத்திற்கு துரதிர்ஷ்டம் ஏற்பட்டது. சவுனா வந்து சேரவில்லை, அழிக்கப்பட்டது, மேலும் 1,000 பிராங்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கூகுள் காரணமாக தடை மீறல்
ஒரு தொழில்துறை நிறுவனம், 150,000 பிராங்கு மதிப்பிலான கருவி இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும் பொருட்களை ரஷ்யாவுக்கு அனுப்ப முயன்றதற்காக 5,000 பிராங்கு அபராதம் செலுத்தியது. ஆச்சரியமாக, இந்த மீறல் முயற்சிக்கு கூகுள் காரணமாக இருந்ததாகத் தெரிகிறது.
“சொண்டாக்ஸ்சைட்டுங்” படி, ஒரு ஊழியர் தடைகள் குறித்து தேடும்போது, கூகுளில் கிடைத்த பழைய ஆவணத்தில் அந்த பொருட்கள் தடைப்பட்டியலில் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், நிறுவனம் தவறுதலாக மீறல் செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.