ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றம்
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பேற்பு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட A/HRC/60/L.1/Rev.1 என்ற தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மூலம், மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் (OHCHR) இலங்கை தொடர்பான பணிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்தில், 2022 அக்டோபர் 6ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் கீழ், உயர் ஆணையரின் அனைத்து பணிகளும் தொடரப்பட வேண்டும் என்றும், அடுத்தடுத்த அமர்வுகளில் எழுதப்பட்ட அறிக்கைகளையும், நல்லிணக்கம், பொறுப்பேற்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விரிவான முன்னேற்ற அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைவு அக்டோபர் 1ஆம் திகதி ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்டது. தீர்மானத்தின் முதன்மை ஆதரவாளர்களாக ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டேநேக்ரோ மற்றும் வட மாசிடோனியா ஆகியவை உள்ளன.

மேலும் பெரும்பாலான இணை ஆதரவாளர்கள் ஐரோப்பிய நாடுகளாகும். மொத்தம் 22 நாடுகள் இணை ஆதரவாளர்களாக கையொப்பமிட்டுள்ளன. இதேவேளை, இலங்கை தீர்மானத்தை அறிமுகப்படுத்திய பிரதான குழுவின் (Core Group) அறிக்கையை ஐ.நா. மற்றும் உலக வர்த்தக அமைப்பில் ஐக்கிய இராச்சியத்தின் நிரந்தர பிரதிநிதி குமார் ஐயர் வாசித்தார்.
அவரது உரையில், தற்போதைய இலங்கை அரசாங்கம் எடுத்த சில முக்கிய நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை சவால்களை சமாளிக்க எடுத்துள்ள உறுதிமொழிகள் பாராட்டத்தக்கவை எனக் குறிப்பிட்டார்.
ஆனால் அவை நடைமுறையில் கையாளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மனித உரிமைகள் கவுன்சிலின் 60ஆவது அமர்வு செப்டம்பர் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது மற்றும் அக்டோபர் 8ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.