காசாவில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணத் தடைகளை நீக்க வேண்டும்: சுவிஸ் வலியுறுத்தல்
காசா பகுதியில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து, பல்வேறு நாடுகளுடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
இந்த அறிக்கை, சுவிஸ் வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸ் அவர்களால் நியூயோர்கில் நடைபெற்ற ஐ.நா. மத்திய கிழக்கு மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது. அதில் காசாவிலிருந்து மேற்குக் கரை நோக்கி செல்லும் மருத்துவ வெளியேற்றப் பாதையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், அதில் கிழக்கு ஜெருசலேமும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் உடனடியாக சிகிச்சை பெற முடியும் என்று சுவிட்சர்லாந்தின் வெளியுறவு துறை (DFAE) தெரிவித்துள்ளது. காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலை இனி சகிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. ஐ.நா. இரு நாடு தீர்வு நடைமுறைப்படுத்தல் மாநாட்டில், சுவிட்சர்லாந்து ஏற்கனவே, இஸ்ரேலியரும் பாலஸ்தீனர்களும் பக்கப்பக்கமாக அமைதி, பாதுகாப்பு, மரியாதை ஆகியவற்றுடன் வாழ்வதற்கான ஒரே வழி இந்த இரு நாடு தீர்வே என வலியுறுத்தியிருந்தது.

நீடித்த அமைதிக்கான அடிப்படையான அம்சமாக பாலஸ்தீனத்தின் இருதரப்பு அங்கீகாரம் இருக்க வேண்டும் என்றும், அதற்கான நேர்மையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகே அத்தகைய அங்கீகாரம் சாத்தியமாகும் என்றும் சுவிஸ் தெரிவித்துள்ளது. அதில் பாலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையும், இஸ்ரேலின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு, குடியேற்றக் குடியிருப்புகள், இணைப்புகள், மற்றும் பாலஸ்தீனர்களின் வெளியேற்றங்களைத் திடமாக எதிர்க்கிறது. அனைத்துப் பக்கங்களும் சர்வதேச சட்டங்களையும் மனிதாபிமான சட்டங்களையும் மதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
நியூயோர்கில் பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியா இணைந்து நடத்திய மாநாட்டில் சுவிட்சர்லாந்தை காசிஸ் பிரதிநிதித்துவப்படுத்தினார். அங்கு, காசா போருக்கு முடிவு கட்டும் முயற்சிகளைத் தொடங்கவும், இரு நாடு தீர்வை நடைமுறைப்படுத்தவும், மத்திய கிழக்கு பிராந்திய ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் நியூயோர்க் அறிவிப்பு வலியுறுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து அதனை முழுமையாக ஆதரிக்கிறது என்று வெளியுறவு துறை தெளிவுபடுத்தியுள்ளது.
© KeystoneSDA