அமெரிக்காவிற்கு பொருள் அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்திய சுவிஸ் போஸ்ட்
சுவிஸ் தபால் (Die Schweizerische Post) வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமெரிக்காவிற்கு தபால் வழியாக பொருட்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்குக் காரணம், அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ள புதிய சுங்கச் சட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆவணங்கள் (Documents) மற்றும் எக்ஸ்பிரஸ் (Express) அனுப்புகைகள் மட்டும் தொடர்ந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படலாம் என்று சுவிஸ் தபால் தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய விதிகளால் சிக்கலில் சர்வதேச தபால்
இதுவரை, 800 அமெரிக்க டாலர் மதிப்புக்குக் குறைவான பொருட்கள் சுங்கக் கட்டணமின்றி அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் ஆகஸ்ட் 29 முதல் அமெரிக்க அரசு இந்த சுங்க விலக்கு வரம்பை நீக்கியுள்ளது.
இதனால், சிறிய அளவிலான பொருட்களும், குறைந்த மதிப்புள்ள பொருட்களும் கூட கட்டாயமாக சுங்கத்திற்குப் பதிவு செய்யப்பட்டு வரி செலுத்தப்பட வேண்டும். மேலும், சுங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதத்தில் புதிய நடைமுறைகளையும் அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய விதிகளில் “பொறுப்பு மற்றும் செயல்முறை தொடர்பான பல கேள்விகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் உள்ளன”. அதனால், சுவிஸ் தபால் மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளின் தபால் நிறுவனங்களும் அமெரிக்காவிற்கு பொருள் அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன என Swiss Post தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்புடன் எடுத்த முடிவு
சுவிஸ் Post, இந்த முடிவை சுவிஸ் அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய ஆலோசனைக்குப் பிறகே எடுத்ததாக கூறியுள்ளது. அதிகாரிகள் சூழ்நிலையை கவனித்து வருவதாகவும், தேவையான தீர்வுகள் எடுக்கப்படும் வரை இந்த தடை தொடரும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்காவில் உள்ள சுவிஸ் குடிமக்களும், நிறுவனங்களும் தங்கள் பொருட்கள் அனுப்பும் திட்டங்களில் தற்காலிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
@KeystoneSDA