‘உறுதியான லாபம்’, ‘விரைவான வருமானம்’ : சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் மோசடி
சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் ஜூரா மாநில போலீசார் (Kantonspolizei Jura) பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பல போலியான ஆன்லைன் டிரேடிங் பிளாட்ஃபாரங்கள் (Fake Trading Platforms) முதலீட்டாளர்களை குறிவைத்து, “உறுதியான லாபம்”, “விரைவான வருமானம்” என்கிற வாக்குறுதிகளால் ஏமாற்றி, இறுதியில் அவர்களின் பணத்தை பறித்து விடுகின்றன என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எப்படி மோசடி நடக்கிறது?
- முதலீட்டாளர்கள், பெரும்பாலும் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) அல்லது பிற டிஜிட்டல் முதலீட்டு வாய்ப்புகளின் பெயரில் தொடர்பு கொள்ளப்படுகிறார்கள். ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலீடு செய்தால், போலியான லாபக் கணக்குகள் காட்டி அவர்களை நம்ப வைக்கிறார்கள். பிறகு அதிக பணத்தை முதலீடு செய்ய தூண்டி, இறுதியில் அந்த பிளாட்ஃபாரமும், முதலீட்டாளர்களின் பணமும் காணாமல் போகிறது.

இவ்வாறான விளம்பரங்கள் வருகின்றபோது மோசடிகளில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- “உறுதியான லாபம்” என்று யாரேனும் சொன்னால் உடனே சந்தேகம் கொள்ள வேண்டும். முதலீடு செய்யும் நிறுவனம் அல்லது பிளாட்ஃபாரம் சுவிஸ் நிதி சந்தை மேற்பார்வை ஆணையம் (FINMA)-இல் பதிவு செய்யப்பட்டதா என்பதை சரிபார்க்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் கிடைக்கும் முதலீட்டு அழைப்புகளை தவிர்க்க வேண்டும்.
ஏற்கனவே பணத்தை இழந்துவிட்டால் … உடனடியாக உள்ளூர் போலீசிடம் புகார் செய்ய வேண்டும். உங்கள் வங்கி அல்லது கிரெடிட் கார்டு வழங்குநருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அனைத்து ஆவணங்கள், ரசீதுகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை சான்றாக பாதுகாக்க வேண்டும். எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலவச தகவல் புத்தகம்
ஜூரா போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு இலவச விளக்க புத்தகம் (Broschüre) வெளியிட்டுள்ளனர். அதில்:
- இணையத்தில் முதலீட்டு மோசடி எவ்வாறு செயல்படுகிறது,
- முதலீட்டிற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்,
- ஏற்கனவே ஏமாந்தால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,
என விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.