கோடைகால பயணிகள் வருகை : சுவிட்சர்லாந்து விமான நிலையங்கள் தயார் நிலையில்
சுவிட்சர்லாந்தின் மூன்று முக்கிய விமான நிலையங்களான சூரிச், ஜெனீவா மற்றும் பாசல், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் பயணிகள் எண்ணிக்கையை சமாளிக்க பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
விமான நிலையங்களில் தரை சேவைகளை வழங்கும் நிறுவனமான Swissport, ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறுமாதங்களில் சுமார் 500 புதிய ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. இதில் சூரிச் விமான நிலையத்திற்கு 320 பேர், பாசலுக்கு 100 பேர் மற்றும் ஜெனீவாவிற்கு 80 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கான பயிற்சிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
ஜெனீவா விமான நிலையத்தில் மட்டும், ஒரு நாளில் 45,000 பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஜூலை 27 (ஞாயிறு), ஆகஸ்ட் 3 மற்றும் 10 (வெள்ளிக்கிழமைகள்) ஆகிய நாட்கள் மிகவும் பரபரப்பாக இருக்கலாம் என Swissport தெரிவித்துள்ளது.

சூரிச் விமான நிலையமும் பயணிகளின் மிகப்பெரிய திரளுக்கு தயாராகி வருகிறது. “உச்ச நாள்களில், ஒரு நாளுக்கு 43,000 பயணிகளை நாங்கள் கையாள வேண்டி இருக்கும். அதை முன்னிட்டு, 1,100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினசரி பணியில் இருக்கிறார்கள். வார இறுதிகளில் கூடுதல் ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள்” என Swissport செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஜூலை 19 மற்றும் 20 ஆம் தேதிகள் பயணிகளின் உச்சநாள்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. பாசல் விமான நிலையத்திலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, பயணிகள் எண்ணிக்கை 2 முதல் 3 சதவீதம் அதிகரிக்கும் என Swissport கணிக்கிறது.
இந்த பரபரப்பான காலகட்டத்தில் நடவடிக்கைகள் சீராகவும் தாமதமின்றியும் நடைபெற, பணியாளர் எண்ணிக்கையும், சேவை உபகரணங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக Swissport தெரிவித்துள்ளது. இந்த கோடைக்காலத்தின் வெப்பத்திலும் பயணிகள் குழப்பமின்றி, சீரான சேவையை அனுபவிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
@KeystoneSDA