ஜெனீவா பிரான்ஸ் எல்லையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, இருதரப்பினருக்கும் இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
பிரான்சுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் எல்லை தாண்டிப் பயணிக்கும் வாகனங்களால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, தினமும் ஜெனீவாவில் மட்டுமே ஐந்தரை மணி நேரம் வரை தாமதம் ஏற்படுகிறது.
ஆகவே, இந்த போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இருதரப்பும் ஆளுக்கு 182 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் செலவில் திட்டங்களை முன்வைத்துள்ளன. அதற்கான ஒப்பந்தத்தில் இருதரப்பு அதிகாரிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

சொந்த வாகனங்களில் வருவோர், குறிப்பிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கான வசதிகள், அதிக எண்ணிக்கையிலான மக்களை ஏற்றிச் செல்லும் வகையிலான பேருந்துகள், ட்ராம்கள், குறிப்பிட்ட வாகனங்களுக்கு குறிப்பிட்ட பாதைகள் என பல விடயங்கள் இந்த திட்டத்தில் அடங்கும்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற பிரேரணைகள் முன்வைக்கவேண்டும் என்பதால், 2026 இறுதி அல்லது 2027 துவக்கத்தில் இந்த திட்டங்கள் துவக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.