வலைஸ் கன்டோனில் கற்பாறை சரிவு – 20 பேர் வெளியேற்றம், ரயில் போக்குவரத்து பாதிப்பு
சுவிட்சர்லாந்தின் வலைஸ் (Valais) கன்டோனில் உள்ள St.Niklaus கிராமத்தில் ஏற்பட்ட கற்பாறை சரிவால் சுமார் 20 பேர் பாதுகாப்பு காரணங்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிகாலை சுமார் 7 மணியளவில், “Birchmatten” விளையாட்டு மைதானத்தின் மேற்புறத்தில் உள்ள கற்பாறைச் சுவரிலிருந்து பாறை துண்டுகள் உதிர்ந்து கீழே விழுந்தன. அவை அருகிலிருந்த ரயில் பாதையையும் கடந்து சென்றாலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் மாட்டர்ஹோர்ன்–கோத்தார்ட் ரயில்வே நிறுவனம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. St. Niklaus மற்றும் Täsch இடையிலான ரயில் போக்குவரத்து குறைந்தபட்சம் நாளை காலை வரை நிறுத்தப்பட்டுள்ளது. கற்பாறை சரிவே இதற்குக் காரணம் என ரயில்வே நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. பயணிகளுக்காக மாற்று பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.
சம்பவத்திற்குப் பின்னர் உள்ளூர் நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிப்பு ஏற்பட்ட பகுதி முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 10 வீடுகளில் வசிக்கும் 20 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு குறைந்தபட்சம் நாளை வரை அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
St. Niklaus நகர மேயர் அளித்த பேட்டியில், “கடந்த 30 ஆண்டுகளாக இந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை. புவியியல் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து நிலைமையை விரிவாக மதிப்பீடு செய்து வருகின்றனர்” என்று கூறினார்.

வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நான்கு முதல் ஐந்து பேர் வரை கிராமத்தில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் உணவகத்தில் உணவு வழங்கப்பட்டதாகவும் Walliser Bote செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கற்பாறை சரிவால் பாதுகாப்பு தடுப்புகள் சேதமடைந்ததுடன், விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அமர்விடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மைதானத்தின் புல்வெளிக்கு ஏற்பட்ட சேதத்தை தற்போது மதிப்பிட முடியாத நிலையில் உள்ளது, ஏனெனில் அந்த பகுதி இன்னும் பனியில் மூடப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையிலும் St. Niklaus பகுதியில் சிறிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான பாறை சரிவு அபாயம் குறித்து நிபுணர்கள் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இயற்கை சீற்றங்களின் ஆபத்து குறித்து மீண்டும் ஒரு எச்சரிக்கையாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.