சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு வீடு வாங்க கட்டுப்பாடு கடும் செய்ய திட்டம்
சுவிட்சர்லாந்தில் வீட்டு வசதி பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டவர்களுக்கு நிலம் மற்றும் வீடுகளை வாங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை Swiss Federal Council புதன்கிழமை அறிவித்துள்ளது.
இந்த புதிய முன்மொழிவின் படி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் EFTA (நோர்வே, ஐஸ்லாந்து, லிச்செண்ஸ்டைன்) நாடுகளைச் சேர்ந்தவர்களல்லாத வெளிநாட்டவர்கள், சுவிட்சர்லாந்தில் வீடு வாங்க முன் கட்டாயமாக அனுமதி பெற வேண்டும். குறிப்பாக, அவர்கள் முதன்மை குடியிருப்புகளாக பயன்படுத்தும் வீடுகளுக்கே இந்த விதி கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ளூர் மக்களுக்கு வீடு கிடைப்பதில் சிரமம் அதிகரித்து வருவது அரசை இந்த முடிவுக்கு தள்ளியுள்ளது. சமீப ஆண்டுகளில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் குடியேறிகள் அதிக அளவில் சொத்துகளை வாங்கியதால், வீட்டு விலைகள் உயர்ந்து உள்ளூர் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், விடுமுறை வீடுகள் (holiday homes) தொடர்பிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளன. தற்போது ஒவ்வொரு கன்டோனுக்கும் வெளிநாட்டு குடிமக்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ள வீடுகளின் வருடாந்திர ஒதுக்கீடு உள்ளது. இந்த ஒதுக்கீடுகளை குறைக்கும் திட்டமும் அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதோடு மட்டுமல்லாமல், வெளிநாட்டவர்களுக்குள் நடைபெறும் சொத்து விற்பனைகளும் இனிமேல் அனுமதி பெறும் முறைக்கு உட்படுத்தப்பட உள்ளது. அதாவது, ஒரு வெளிநாட்டவர் மற்றொரு வெளிநாட்டவரிடம் இருந்து வீடு வாங்கினாலும் கூட, அரசின் ஒப்புதல் அவசியமாகும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், சுவிட்சர்லாந்தில் வீட்டு வசதி நிலையை சீரமைத்து, உள்ளூர் மக்களுக்கு வீடுகளை எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் முன் சட்ட மாற்றங்கள் மற்றும் அரசியல் விவாதங்கள் நடைபெறவுள்ளன.