ஸ்கி உலகக் கோப்பை முன்பாக பாதுகாப்பு ஆய்வு: மதுபான விடுதிகளில் தீவிர சோதனை
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள ஸ்கி உலகக் கோப்பை போட்டிகளை முன்னிட்டு, உள்ளூர் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களின் பாதுகாப்பை தீவிரமாக ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். Crans-Montana பகுதியில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த பயங்கர தீ விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் வார இறுதிக்கே Adelboden (அடல்வோடன்) நகருக்கு ஸ்கி ரசிகர்கள் பெருந்திரளாக வரத் தொடங்க உள்ளனர்.
திங்கட்கிழமை சுவிஸ் பொதுவான வானொலி நிறுவனமான SRF-க்கு அளித்த பேட்டியில், அடெல்போடன் நகர மேயர் வில்லி ஷ்ரான்ஸ், கிரான்ஸ்-மொண்டானா விபத்து இன்னும் மனதில் ஆழமாக இருக்கின்ற நிலையில், நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் கிராமத்தில் உள்ள அனைத்து மதுபான விடுதிகள் மற்றும் பொது இடங்களையும் ஆய்வு செய்து, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய உள்ளதாக அவர் கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில், விடுதி உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு உரையாடல்களும் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், Lauterbrunnen (லாவ்டர்ப்ருன்னன்)( நகர மேயர் கார்ல் நெப்ளின், Wengen பகுதியில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளை முன்னிட்டு, அங்குள்ள மதுபான விடுதிகள் மற்றும் இரவு கிளப்புகளின் பாதுகாப்பு நிலையை நகராட்சி கண்காணிக்கும் என தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை நடைபெறவுள்ள நகர மன்ற கூட்டத்தில், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மதுபான விடுதி உரிமையாளர்கள் எரியக்கூடிய பொருட்கள் உள்ளனவா, உடை வைப்பிடங்கள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும், அவசர கால தப்பிச் செல்லும் பாதைகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் கட்டாயமாகச் சரிபார்க்க வேண்டும் என மேயர் வலியுறுத்தினார். மேலும், தீப்பிழம்புகள் மற்றும் மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்படுவதில் கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
SRF தகவலின்படி, பாதுகாப்பு காரணங்களால் அந்தப் பகுதியில் உள்ள இரண்டு இரவு கிளப்புகளை மூட வேண்டும் என சில தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், நகராட்சிக்கு அவ்வாறு மூடுவதற்கான சட்ட அதிகாரம் இல்லை என மேயர் நெப்ளின் தெரிவித்ததுடன், நிலைமையை தொடர்ந்து கவனத்தில் வைத்திருப்போம் என்றும் உறுதியளித்துள்ளார். கிரான்ஸ்-மொண்டானா தீ விபத்துக்குப் பிறகு, சுவிட்சர்லாந்து முழுவதும் பொது இடங்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
© KeystoneSDA