அமெரிக்காவில் ஐஸ் நடவடிக்கைகளில் சுவிஸ் ஆயுதங்கள்; மனித உரிமை கவலை
அமெரிக்காவில் குடியேற்ற அமலாக்க நடவடிக்கைகளில் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி, கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவின் மினியாப்பொலிஸ் (Minneapolis) நகரில் நடைபெற்ற குடியேற்ற சோதனைகளின் போது இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
சமீபத்தில் வெளியான காணொளிகளில், ICE எனப்படும் அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகள், “உயிர்க்கொல்லாத” ஆயுதங்கள் என கூறப்படும் கருவிகளை, போராட்டக்காரர்களின் முகத்தை நேரடியாக குறிவைத்து பயன்படுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இவை பொதுவாக கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்றாலும், இவ்வாறு பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த கண்ணீர் வாயு ஏவுகணை கருவிகள், சுவிட்சர்லாந்தின் தூன் (Thun) நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட B&T என்ற ஆயுத நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தங்களின் தயாரிப்புகளை தலை அல்லது முகப்பகுதியை குறிவைத்து பயன்படுத்தக்கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தியுள்ள நிலையிலும், வெளியான காணொளிகளில் அதற்கு முற்றிலும் மாறான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மனித உரிமை அமைப்புகள், இந்த வகையான ஆயுதப் பயன்பாடு சட்டவிரோதமானதும், உயிருக்கு ஆபத்தானதும் எனக் கூறி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. “உயிர்க்கொல்லாத” என பெயரிடப்பட்ட ஆயுதங்களும் தவறான முறையில் பயன்படுத்தப்படும்போது உயிரிழப்புக்கு காரணமாகலாம் என்பதையே இந்த சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்காவில் குடியேற்ற விவகாரம் ஏற்கனவே பெரும் அரசியல் மற்றும் சமூக விவாதமாக இருக்கும் நிலையில், சுவிஸ் தயாரிப்பு ஆயுதங்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற வேண்டிய அவசியம் இருப்பதாக மனித உரிமை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
© WRS