நெடுஞ்சாலை ஓய்வு பகுதிகளில் போலி காவலர்கள் போல் நடித்து கொள்ளை; இருவர் கைது
சுவிட்சர்லாந்தின் நெடுஞ்சாலை ஓய்வு பகுதிகளில் நடந்த தொடர் வன்முறை கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக, காவலர்களாக நடித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சூரிக் கன்டோனல் காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர்கள், இரவு நேரங்களில் போலியான காவல் சோதனைகள் நடத்துவது போல் நடித்து வாகன ஓட்டிகளை நிறுத்தி கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது. சீயூசாக் (Seuzach) அருகே நடந்த ஒரு சம்பவத்தில், கார் விற்பனையாளரை நிறுத்தி அவரது பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு, ஆஃபோல்டர்ன் ஆம் ஆல்பிஸ் (Affoltern am Albis) பகுதியில் இதேபோன்ற மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது. இதில் மூன்று உக்ரைனிய கார் வியாபாரிகள் குறிவைக்கப்பட்டனர். அந்த தாக்குதலின் போது ஒரு பெண் தாக்கப்பட்டு, சில மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக 35 மற்றும் 42 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது விசாரணை முடியும் வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இருவரும் இந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்களிலும் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வகை போலி காவல் சோதனைகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகமான நிலைகள் ஏற்பட்டால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.