ஜெனீவா நகரில் லக்சுரி கடிகாரக் கடையில் கொள்ளை முயற்சி; குற்றவாளிகள் தப்பியோட்டம்
ஜெனீவாவின் நகர மையப் பகுதியில் ஆயுதங்களுடன் நடந்த கொள்ளை முயற்சியைத் தொடர்ந்து, அங்குள்ள போலீசார் நேற்று காலை பெரிய அளவிலான நடவடிக்கையை மேற்கொண்டனர். காலை 11 மணிக்கு முன், மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குழு ரூ டு ரோன் பகுதியில் உள்ள ரிச்சர்ட் மில் பிரபல லக்சுரி கடிகாரக் கடையை இலக்காகக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொள்ளை முயற்சிக்குப் பிறகு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். தப்பிச்சென்றபோது, அவர்களில் ஒருவர் ஆங்கிலத் தோட்டம் (Jardin Anglais) அருகே ஒரு பொருளை வீசியதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர். அது கைக்குண்டாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உடனடியாக குண்டு செயழிழக்கவைக்கும் படை அழைக்கப்பட்டு, அந்த பகுதி ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மூடப்பட்ட நிலையில் பாதுகாப்பாக வைத்துப் பரிசோதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் இயக்கம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
தற்போது, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்காக போலீசாரின் விரிவான தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை எவரும் காயமடைந்ததாக அல்லது பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக தகவல் இல்லை.
பிரபல கடிகார வியாபாரங்கள் அடிக்கடி குற்றவாளிகளின் இலக்காக மாறி வரும் நிலையில், ஜெனீவாவின் இந்த சம்பவம் உள்ளூர் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
® WRS