பொது போக்குவரத்து ஊழியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க பிரசாரம்
சுவிட்சர்லாந்தின் போக்குவரத்து தொழிற்சங்கமான SEV (Sindacato del personale dei trasporti) நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 03, 2025) நாடு முழுவதும் “வன்முறையை நிறுத்து – பணியாளர்களுக்கு மரியாதை காட்டு” என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த விழிப்புணர்வு, நாள் முழுவதும், பொது போக்குவரத்து ஊழியர்கள் வன்முறைக்கு எதிரான செய்திகளைக் கொண்ட (Badge) பேட்ஜ்கள் மற்றும் கைப்பட்டைகளை அணிந்து பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
SEV தொழிற்சங்கம், சுவிட்சர்லாந்தின் பல்வேறு நகரங்களில் பயணிகளுடன் உரையாடி, பொது போக்குவரத்து ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. “பேருந்து அல்லது ரயிலைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு சீருடைக்குப் பின்னால் ஒரு மனிதர் இருப்பதை உணர வேண்டும். மரியாதை என்பது விருப்பமல்ல, கட்டாயமாகும். வாய்மொழி அல்லது உடல் ரீதியான வன்முறைக்கு பொது போக்குவரத்தில் இடமில்லை,” என SEV இன் துணைத் தலைவர் பேட்ரிக் கும்மர் (Patrick Kummer) அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு நாள், பயணிகள் போக்குவரத்து சட்டத்தின் (LTV) 59வது பிரிவை நினைவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பிரிவு, பொது போக்குவரத்து ஊழியர்களுக்கு எதிரான உடல் மற்றும் வாய்மொழி தாக்குதல்களை உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.
தற்போது, சுவிட்சர்லாந்து முழுவதும் ஒரே மாதிரியான அணுகுமுறையை உறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி, போக்குவரத்து நிறுவனங்கள் தாக்குதல்களை தொடர்ந்து அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும், மேலும் அதிகாரிகள் பிரிவு 59 இன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© ATS