பெர்னில் ஈரான் தூதரகத்தின் முன் போராட்டம்: Pepper Spray பயன்படுத்திய காவல் துறை
சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள ஈரான் தூதரகத்தின் முன்பாக செவ்வாய்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பெர்ன் கன்டோனல் காவல் துறை மிளகாய் தெளிப்பை பயன்படுத்தியுள்ளது. நிலைமை கடும் பதற்றமாக மாறியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்கள் சாலையை மறித்து போக்குவரத்தை தடை செய்திருந்ததாகவும், பலமுறை எச்சரித்தும் அவர்கள் சாலையை திறக்க மறுத்ததையடுத்து, அதிகாரிகள் மிளகாய் தெளிப்பை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக காவல் துறை விளக்கமளித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ உதவி தேவைப்பட்டு, சம்பவ இடத்திலேயே அவசர மருத்துவ பணியாளர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், போராட்டத்திற்கு முன்பாக மூன்று ஆண்கள் அனுமதியின்றி பெர்னில் உள்ள Iranian Embassy வளாகத்துக்குள் நுழைந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவரை போலீசார் தடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மற்ற இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக Kantonspolizei Bern தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே காவல் துறையின் முதன்மை நோக்கம் என்றும், சட்டம் மற்றும் ஒழுங்கை மீறி நடைபெறும் எந்தவித செயல்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Keystone-SDA