2030 முதல் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி – சுவிஸ் அரசின் திட்டம்
சுவிஸ் அரசு 2030 ஆம் ஆண்டிலிருந்து மின்சார வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான இரண்டு விதமான வரி முறைகள் தற்போது ஆலோசனைக்காக முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று, வாகனங்கள் ஓடும் கிலோமீட்டர் அடிப்படையில் வரி விதிப்பது; மற்றொன்று, வாகனங்களை சார்ஜ் செய்யும் போது பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அடிப்படையில் வரி வசூலிப்பது.
இத்திட்டம், தற்போது நிலவும் கனிம எண்ணெய் வருவாய் குறைவுக்கு ஈடு செய்யும் வகையில் கொண்டு வரப்படுவதாக சுவிஸ் கூட்டாட்சி அரசு விளக்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் செலுத்தும் எரிபொருள் வரியே சாலைகள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. ஆனால் மின்சார வாகனங்கள் இந்த வரி வலையமைப்புக்கு உட்படாததால், அரசிற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால், மின்சார வாகன உரிமையாளர்களும் சாலைகள் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கான செலவுக்கு பங்காற்றுவது நியாயமானது என அரசு கருதுகிறது.

முன்மொழியப்பட்ட முதல் விருப்பத்தில், வாகனம் அதிக எடையுடையதாக இருந்தால், ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் அதிக வரி விதிக்கப்படும். இரண்டாவது விருப்பத்தில், வாகனம் சார்ஜ் செய்யப்படும் மின்சாரத்திற்கு நேரடியாக வரி விதிக்கப்படும். இதன்படி, ஒரு கிலோவாட் மணிக்கு 22.8 சுவிஸ் சென்ட் என்ற அளவில் வரி வசூலிக்கப்படும். இந்த தொகை சார்ஜ் நிலையங்களிலேயே நேரடியாகப் பெறப்படும்.
இந்த புதிய வருவாய், சாலை பராமரிப்பு நிதிக்கே ஒதுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் நடைபெறும் பொது ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், நிலையான போக்குவரத்து வளர்ச்சியையும் ஊக்குவித்தாலும், அதேசமயம் சாலை பராமரிப்பு செலவுகள் குறையக் கூடாது என்ற சிக்கலான சமநிலையை பேண முயல்கிறது.
© KeystoneSDA