வீட்டு பற்றாக்குறையை சமாளிக்க புதிய திட்டம் – முதியவர்களின் வீடுகள் மீது கவனம்
சுவிட்சர்லாந்தில் பல தசாப்தங்களாக தனி வீடு வைத்திருப்பது நடுத்தர வர்க்கத்தின் முக்கிய இலக்காகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வீட்டு வசதி பற்றாக்குறை அதிகரித்து வருவதால், அரசாங்கம் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் புதிய அணுகுமுறைகளை ஆராயத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக “baby boomer” தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தற்போது பெரிதான குடும்ப வீடுகளில் தனியாகவோ அல்லது தம்பதிகளாகவோ வாழ்ந்து வருவது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. Federal Office for Housing வெளியிட்ட தகவலின் படி, சுமார் 300,000 தனி வீடுகள் முழுமையாக பயன்படுத்தப்படாமல், அதிக இடம் வீணாக இருக்கும் நிலையில் உள்ளன. மேலும், இவ்வீடுகள் பலவும் முதியவர்களின் தேவைகளுக்கு ஏற்றதாக இல்லாதவையாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, வயதானவர்கள் தங்களுக்கு ஏற்ற சிறிய மற்றும் வசதியான வீடுகளுக்கு மாற்றம் செய்ய ஊக்குவிக்கும் வழிகளை அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். இதன் மூலம், பெரிய வீடுகளில் இருக்கும் கூடுதல் இடத்தை பயன்படுத்தி, புதிய குடும்பங்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த தொடர்பில் தேசிய அளவில் ஒரு விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. நகரங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் இடத்தை திறம்பட பயன்படுத்தும் வகையில் “densification” எனப்படும் முறைகளை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதையும் இந்த ஆய்வு பரிசீலிக்கிறது.
இந்த ஆய்வின் முதல் முடிவுகள் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு பற்றாக்குறையை சமாளிக்க சுவிட்சர்லாந்து எடுத்துள்ள இந்த புதிய முயற்சி, எதிர்கால குடியிருப்பு திட்டமிடலில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.