தூக்கக் கோளாறால் நடந்த கொலை: சுவிட்சர்லாந்தில் அபூர்வ வழக்கு முடிவு
சுவிட்சர்லாந்தில் கடந்த 2024 செப்டம்பர் மாதம் இடம்பெற்ற அபூர்வமான கொலை வழக்கில், 87 வயதுடைய ஓய்வு பெற்ற குடும்ப மருத்துவருக்கு எதிரான வழக்கை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கைவிட்டுள்ளனர். தூக்கத்தில் இருந்தபோது தனது துணையை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்த இந்த வழக்கு, நீண்டகால நீதிமன்ற மற்றும் நிபுணர் ஆய்வுகளுக்குப் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.
சுவிஸ் செய்தித் தளம் Beobachter வெளியிட்ட தகவலின்படி, நீதிமரபியல் நிபுணர்கள் மேற்கொண்ட விரிவான பரிசோதனையில் குறித்த நபர் ‘REM Sleep Behavior Disorder’ எனப்படும் ஒரு தீவிர தூக்கக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டது. இந்த கோளாறு காரணமாக, ஆழ்ந்த தூக்கநிலையிலேயே மனிதர்கள் தங்களது கனவுகளை உடல் செயல்பாடுகளாக வெளிப்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில் அவர் உணர்வோ கட்டுப்பாடோ இல்லாமல் செயல்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, இது திட்டமிட்ட அல்லது நோக்கமுள்ள கொலை அல்ல என்று அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதனால் குற்றவியல் வழக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து சட்டப்படி, குற்ற நோக்கம் நிரூபிக்கப்படாத சூழலில் கொலை குற்றச்சாட்டை நிலைநிறுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, குறித்த நபரின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றச் செலவுகளுக்காக அவர் 30,000 சுவிஸ் பிராங்குகள் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சுவிட்சர்லாந்தில் மிகவும் அபூர்வமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தூக்கக் கோளாறுகள் மற்றும் குற்றவியல் பொறுப்பு தொடர்பான சட்ட, மருத்துவ விவாதங்களை இது மீண்டும் முன்னிறுத்தியுள்ளது. நிபுணர்கள் கூறுவதாவது, REM தூக்கக் கோளாறு போன்ற பிரச்சினைகள் மிக அரிதாகவே கடுமையான விளைவுகளை ஏற்படுத்தினாலும், அவற்றை மருத்துவ ரீதியாக சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம் என்பதாகும்.