வாடகைக் கார் விவகாரம் : கானா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 11 மாதங்கள் சிறை
சுவிட்சர்லாந்தில் வாடகைக்கு எடுத்த காரை திருப்பிக் கொடுக்காமல் வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்ற வழக்கில், கானா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு, எல்லை தாண்டிய வாகன மோசடிகள் தொடர்பான விவகாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
குறித்த நபர், சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் இருந்து ஒரு BMW காரை வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால், ஒப்பந்த காலம் முடிந்தபோதும் அந்தக் காரை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. அதன்பின்னர், அவர் எங்கே சென்றார் என்பதும் தெரியாமல் மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், அந்த வாகனம் Tilbury Port துறைமுகத்தில், ஒரு கண்டெய்னருக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கார் Ghana நாட்டுக்கு அனுப்பப்படவிருந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டபோது, தாம் காரை நிறுத்திய இடத்தில் அது காணாமல் போய்விட்டதாகவும், காரின் மாயம் அடைவதற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், வழக்கு விசாரணை நடைபெற்று வந்த காலத்தில் அந்த நபர் மீண்டும் மாயமானார்.
நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில், உண்மையிலேயே கார் திருடப்பட்டிருந்தால், உடனடியாக போலீசில் புகார் அளித்திருக்க வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என்றும், மேலும் அந்த வாகனம் கானாவுக்கு அனுப்பப்படவிருந்தது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், இது தற்செயலான சம்பவம் என நம்ப முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த நபருக்கு 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், தற்போது அந்த நபர் எங்கு உள்ளார் என்பது அதிகாரிகளுக்கே தெரியாத நிலையில், அவர் இல்லாமலேயே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.