சுவிட்சர்லாந்தில் ஈரான் தொடர்பான தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரிக்கும் வாய்ப்பு என எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் ஈரான் தொடர்பான தீவிரவாத நடவடிக்கைகளின் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் உளவுத்துறை அமைப்பான கூட்டாட்சி புலனாய்வு சேவை (Federal Intelligence Service – FIS) வெளியிட்ட தகவலின்படி, ஈரான் தனது எதிரிகளாகக் கருதப்படும் இலக்குகளை நோக்கி பல்வேறு நாடுகளில் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
FIS அமைப்பின் பேச்சாளர் கிறிஸ்டோப் ஞேகி (Christoph Gnägi) ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் ஊடகங்களிடம் பேசியபோது, ஈரான் அல்லது அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் ஐரோப்பா மற்றும் சுவிட்சர்லாந்தில் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்து உள்ளார். ஈரானின் உளவுத்துறைகள், அதனுடன் இணைந்த குழுக்கள் அல்லது ஈரானால் பணியமர்த்தப்பட்ட குற்றவியல் வலையமைப்புகள் மூலம் இத்தகைய நடவடிக்கைகள் நடைபெறக்கூடும் என்று அவர் கூறினார்.

இஸ்ரேல், யூத அமைப்புகள் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் பதிலடி முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என அந்த அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. உலக அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் காரணமாக இத்தகைய அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அதிகாரிகள் கருதுகின்றனர்.
மேலும், அபாயம் ஈரானிலிருந்து மட்டுமல்லாமல், அதனை ஆதரிக்கும் அமைப்புகளிடமிருந்தும் வரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொல்லா (Hezbollah) இயக்கம் சுவிட்சர்லாந்தில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருவதாகவும் FIS தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பு அமைப்புகள் நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருகின்றன. நாட்டின் முக்கிய இடங்கள், யூத சமூகம் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் சுற்றுவட்டாரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SDA