இரான் போர் காரணமாக சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு
இரானில் நடைபெற்று வரும் போர் சூழ்நிலை சுவிட்சர்லாந்தின் சுற்றுலாத்துறையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் குறைவதால் சில ஹோட்டல் நிறுவனங்கள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றன.
லுசேர்ன் ஏரிக்கரையில் அமைந்துள்ள ப்ருன்னென் (Brunnen) நகரில் உள்ள City Hotel எனும் ஹோட்டலின் உரிமையாளர் ஸ்டோயன் ஸ்டெவானோவிச் (Stojan Stevanovic) இதுகுறித்து கவலை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள விமானப் போக்குவரத்து தடைகள் காரணமாக சீன சுற்றுலாப் பயணிகள் தற்போது முற்றிலும் காணாமல் போய்விட்டதாக அவர் கூறுகிறார்.
இரான் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக பல விமான சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. அதேசமயம் உக்ரைன் போரின் காரணமாக சைபீரியா வழியாக செல்லும் மாற்று விமானப் பாதைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், ஆசிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு பயணம் செய்வது சிக்கலாகியுள்ளது. இதன் விளைவாக சுவிட்சர்லாந்துக்கு வர திட்டமிட்டிருந்த பல சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணங்களை ரத்து செய்து வருகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக சீன சுற்றுலாப் பயணிகளை மையமாகக் கொண்டு தனது ஹோட்டல் சேவைகளை வழங்கி வந்ததாக ஸ்டெவானோவிச் கூறுகிறார். ஆனால் தற்போதைய நிலைமையால் சுமார் 20,000 இரவு தங்கும் முன்பதிவுகள் இழக்கப்பட்டுள்ளதாக அவர் மதிப்பிடுகிறார். தற்போது தொடர்ந்து முன்பதிவு ரத்துச் செய்திகள் வருவதால், வரவிருக்கும் கோடை கால சுற்றுலா பருவம் மிகவும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் அவரிடம் உள்ளது.
மேலும் இந்த இழப்புகளுக்கு காப்புறுதி நிறுவனங்களோ அல்லது சுற்றுலா ஏற்பாட்டாளர்களோ முழுமையாக ஈடு செய்ய வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். உலக அரசியல் மோதல்களின் தாக்கம் நேரடியாக சுற்றுலாத்துறையையும் பாதிக்கக்கூடியது என்பதை இந்த நிலைமை மீண்டும் வெளிப்படுத்துகிறது. WRS