கெர்செர்ஸ் பேருந்து தீ விபத்து: இளைஞர் தன்னைத் தானே தீ வைத்ததால் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணை தகவல்
சுவிட்சர்லாந்தின் கெர்செர்ஸ் (Kerzers) நகரில் செவ்வாய்க்கிழமை ஒரு பொது போக்குவரத்து பேருந்தில் ஏற்பட்ட கொடிய தீ விபத்து தொடர்பான ஆரம்ப விசாரணை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் திட்டமிட்ட செயல் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், இதற்கு எந்தவித அரசியல் அல்லது தீவிரவாத நோக்கும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2026 மார்ச் 10 ஆம் தேதி மாலை இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்தது. ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், சுவிஸ் குடியுரிமை கொண்டதாகக் கருதப்படும் ஒரு இளைஞர் மாலை சுமார் 5.45 மணியளவில் டூடிங்கன் (Düdingen) நகரில் பேருந்தில் ஏறியதாகவும், பின்னர் சுமார் 6.25 மணியளவில் கெர்செர்ஸ் நகரை அடைந்தபோது தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அதன் பின்னர் தீ வேகமாக பரவி முழு பேருந்தையும் சூழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது இருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் ஒருவர் அந்த இரவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த பிராந்தியத்திலேயே வசித்து வந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை அரசு வழக்கறிஞர் அலுவலகம் தற்போது முழுமையாக நிராகரித்துள்ளது. ஆரம்ப விசாரணைகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் படி, இந்தச் செயலை ஒரே நபர் தனியாக மேற்கொண்டிருக்கலாம் என்றும், அவர் பெர்ன் (Bern) கன்டோனில் வசித்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அந்த நபர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அவர் காணாமல் போனவர் என அவரது குடும்பத்தினர் முன்பே புகார் அளித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். © Kapo Freiburg