சுவிட்சர்லாந்தில் அரிய துருவ ஒளி; 20 ஆண்டுகளில் மிக வலுவான சூரிய புயல்
மிகவும் சக்திவாய்ந்த சூரிய புயலின் தாக்கம் காரணமாக Switzerland நாட்டின் பல பகுதிகளில் துருவ ஒளி எனப்படும் ஆரோரா போரியாலிஸ் (Aurora Borealis) தென்பட்டதாக சுவிஸ் வானிலை சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் பதிவான மிக வலுவான புவிக் காந்த புயலாகக் கருதப்படுகிறது.
இந்த அபூர்வமான இயற்கைக் காட்சி சுவிட்சர்லாந்தின் பல இடங்களில் காணப்பட்டதாகவும், குறிப்பாக இந்நாட்டில் அரிதாகவே தோன்றும் பச்சை நிற துருவ ஒளியும் இந்த முறை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடுபனி இல்லாத பகுதிகளிலும், அதிக உயரம் கொண்ட மலைப்பகுதிகளிலும் இந்த ஒளிக்காட்சி தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஆனால் மத்திய சமவெளிப் பகுதிகளில் 700 முதல் 800 மீட்டர் உயரம் வரை பரவியிருந்த அடர்ந்த மூடுபனி காரணமாக, பல இடங்களில் மக்கள் இந்த காட்சியை காண முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்த புவிக் காந்த புயல் ஐந்து நிலை அளவுகோலில் நான்காம் நிலையை எட்டியுள்ளதாகவும், இதனால் மின்சார விநியோக வலையமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள்களில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் Space Weather Prediction Center சார்ந்த நிபுணர் ஷான் டால் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 2024 ஆம் ஆண்டில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஐந்தாம் நிலை சூரிய புயல் பதிவானாலும், தற்போதைய புயல் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக வலுவான சூரிய புயலாகும் என விளக்கினார். 2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ‘ஹாலோவீன்’ சூரிய புயல், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் பரவலான மின்தடை மற்றும் சக்தி வலையமைப்பு சேதங்களை ஏற்படுத்தியிருந்தது என்பதும் நினைவுகூரப்படுகிறது.
இந்த முறை ஏற்பட்ட சூரிய புயல், மிகவும் சக்திவாய்ந்த ஒரு சூரிய வெடிப்பின் விளைவாக உருவானதாகவும், அதிலிருந்து வெளியான துகள்கள் பூமியின் காந்தப் புலத்தை பாதித்ததன் காரணமாக துருவ ஒளி தோன்றியதாகவும் அவர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக வானொலி தொடர்புகளில் தடங்கல்கள், செயற்கைக்கோள் செயல்பாட்டில் கோளாறுகள் மற்றும் மின்வலையமைப்புகளில் அதிக சுமை போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. © KeystoneSDA