கிரீன்லாந்திலிருந்து சுவிட்சர்லாந்துக்குப் புதிய தங்கப் பாதை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை தன் நாட்டுடன் இணைப்பது குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள் உலகளவில் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சுவிட்சர்லாந்து தங்க வர்த்தகம் மற்றும் சுத்திகரிப்பு துறையில் தனது உலகளாவிய மையப் பங்கை மேலும் வலுப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆர்க்டிக் பிராந்தியத்திலிருந்து புதிய தங்க இறக்குமதி பாதை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
SonntagsZeitung செய்தித்தாள் வெளியிட்ட தகவலின்படி, சுவிட்சர்லாந்து அரசின் தற்காலிக சுங்கத் தரவுகள், கடந்த ஒரு ஆண்டில் கிரீன்லாந்திலிருந்து சுவிட்சர்லாந்துக்கான தங்க இறக்குமதி பூஜ்ஜியத்திலிருந்து 1.8 கோடி சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர்ந்துள்ளதை காட்டுகின்றன. இந்த திடீர் உயர்வுக்கான காரணம் தொழில்நுட்பமும் புவியியல் சூழலும்தான் என விளக்கப்படுகிறது.
கிரீன்லாந்தில் தற்போது தங்கத்தை சுத்திகரிக்கும் தனிப்பட்ட ஆலை எதுவும் இல்லாததால், அங்கு சுரங்கங்களில் எடுக்கப்படும் தங்கம் சுத்திகரிப்பிற்காக சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்படுகிறது என, மதிப்புமிக்க உலோகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கான சுவிஸ் சங்கத்தின் தலைவர் கிறிஸ்டோஃப் வைல்ட், அந்த ஞாயிற்றுக்கிழமை நாளிதழுக்கு தெரிவித்துள்ளார். இந்த வழித்தடத்தை, தீவில் செயல்படும் ஒரே தங்கச் சுரங்கத்தை நிர்வகிக்கும் சுரங்க நிறுவனம் கூட உறுதிப்படுத்தியுள்ளது. அந்த சுரங்கம், இடைவேளைக்குப் பிறகு 2024 இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டில் சுமார் 200 கிலோகிராம் அளவிலான கிரீன்லாந்து மூலத் தங்கம், நியூஷாடெல் கன்டோனில் உள்ள மெட்டலோர் (Metalor) சுத்திகரிப்பு ஆலையிற்கு அனுப்பப்பட்டு, அங்கு உயர்தர தூய்மையுடன் தங்கக் கட்டிகளாகவும் மற்ற தயாரிப்புகளாகவும் மாற்றப்படுகிறது என செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
இந்த புதிய விநியோக மூலத்திலிருந்து வரும் அளவுகள் முக்கியமானவையாக இருந்தாலும், சுவிட்சர்லாந்தின் மொத்த தங்க வர்த்தக அளவுடன் ஒப்பிட்டால் அவை இன்னும் குறைந்த அளவிலேயே உள்ளன. உதாரணமாக, 2025 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவுக்கு சுவிட்சர்லாந்து 550 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 46 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளைத் தாண்டுகிறது.