சூரிக்–மயாமி Swiss விமானத்தில் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு, பிரான்ஸ் நாட்டு நபர் கைது
சுவிட்சர்லாந்தின் Swiss International Air Lines நிறுவனத்தின் Zurich நகரிலிருந்து Miami நோக்கி சென்ற LX64 விமானத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் தொந்தரவு சம்பவம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், 48 வயதுடைய பிரான்ஸ் நாட்டு நபர் ஒருவர், அருகில் இருந்த 29 வயது பெண் பயணியை அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து People magazine வெளியிட்ட தகவலின்படி, விமானத்தின் பிசினஸ் கிளாஸ் பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை பலர் நேரில் கண்டதாகவும், உடனடியாக விமான பணியாளர்களுக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. விமானப் பணிப்பெண்ணும் இந்த நிகழ்வை கவனித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து 20 Minuten கேட்டபோது, Swiss நிறுவனம் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. பயணியின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், குற்றச்சாட்டுக்குட்பட்ட நபரை உடனடியாக Premium Economy இருக்கைக்கு மாற்றியதாகவும் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பின்னர், தனது தனிப்பட்ட பொருட்களை எடுக்க அனுமதிக்கப்பட்டபோது, அந்த நபர் பெண் பயணிக்கு ஒரு குறிப்பை வழங்க முயன்றதாக கூறப்படுகிறது. அதில் “நீ தூங்கும்போது அழகாக இருக்கிறாய்” என்று எழுதப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமான பணியாளர்கள் அந்த பெண்ணை எழுப்பி நடந்ததை விளக்கியுள்ளனர். அவர் அதிர்ச்சியடைந்ததாகவும், குறித்த நபரை முன்பே அறிந்ததில்லை என தெரிவித்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானம் மயாமியில் தரையிறங்கியதும், அமெரிக்க அதிகாரிகள் அந்த நபரை விசாரணைக்கு உட்படுத்தினர். ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், பின்னர் அந்த பெண்ணை தொட்டதை ஒப்புக்கொண்டதாகவும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதாக நினைக்கவில்லை என்றும், வெறும் தொலைபேசி எண்ணைப் பெற முயன்றதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 29ஆம் தேதி, அமெரிக்காவின் தெற்கு Florida மாவட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மயாமியில் உள்ள தடுப்புக் காவல் மையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கறிஞரின் பதில் இதுவரை வெளியாகவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக Swiss நிறுவனம் அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருவதாக தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் விமானப் பயண தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.