சுவிட்சர்லாந்தின் முர்டன் பகுதியில் போலி போலீசார் 41,000 ஃப்ராங்க் மோசடி – மூவர் கைது
சுவிட்சர்லாந்தின் ஃபிரெய்புர்க் கண்டோனில் உள்ள முர்டன் பகுதியில், செப்டம்பர் 3 ஆம் தேதி பல முதியவர்கள் போலி போலீசாரின் கண்ணில் சிக்கி, பெரிய தொகை பணத்தை இழந்தனர். தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திய மோசடிகள், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, வங்கி மோசடி நடந்ததாக நம்பச் செய்து, பாதிக்கப்பட்டவர்களை வங்கியில் இருந்து பணம் எடுத்து குறிப்பிட்ட இடத்தில் வைக்கச் செய்தனர்.
முதலில் 72 வயது பெண் ஒருவர் இத்தகைய வலுக்கட்டாயத்தில் சிக்கினார். அவர் எடுத்து வந்த பணத்தை, குற்றவாளிகள் அவர் பாராமல் எடுத்துச் சென்றனர். அதே நாளில் எழுபதுகளில் இருக்கும் ஒரு தம்பதியும் இதே முறையில் ஏமாற்றப்பட்டனர். மொத்தத்தில் 41,000 ஃப்ராங்க் மோசடிக்காரர்கள் வசம் சென்றது.
பாதிக்கப்பட்டவர்களின் உடனடி தகவல் மற்றும் பாதுகாப்புப் போலீசாரின் விசாரணையின் அடிப்படையில், அதே நாளில் ஆர்காவ் கண்டோனில் உள்ள கோல்லிகனில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 19 வயதான இவர்களில் ஒருவர் ஆப்கான், மற்றொருவர் துருக்கிய வம்சாவளியினர். அவர்கள் முர்டனுக்கு சென்று பணத்தை சேகரித்ததை ஒப்புக்கொண்டனர்.

பின்னர், அவர்கள் சுமார் 36,500 ஃப்ராங்கை 39 வயது துருக்கிய நபரிடம் ஒப்படைத்ததாகவும், அந்த நபர் பணத்தை மூன்றாம் நபர்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக பெற்றதாகவும் விசாரணையில் வெளிப்பட்டது. மீதமுள்ள பணம் அவர்களது வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மூவரும் ஒரு குற்றச் சங்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றனர். சுவிட்சர்லாந்தில் பல்வேறு தொலைபேசி மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவன், சுவிட்சர்லாந்தின் பல இடங்களில் மொத்தம் 1.5 இலட்சம் ஃப்ராங்க் மதிப்புள்ள பணத்தை முறையே சேகரித்ததை ஒப்புக்கொண்டார்.
மூவரும் தற்போது விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு, ஃபிரெய்புர்க் மாநில வழக்கறிஞர் அலுவலகத்தின் கீழ் விசாரணை தொடர்கிறது. ஃபிரெய்புர்க் கண்டோன் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். உண்மையான போலீசார் ஒருபோதும் வீடுகளுக்குச் சென்று வங்கி அட்டைகள், பணம் அல்லது நகைகளை பாதுகாப்பு என்ற பெயரில் எடுத்துச் செல்ல மாட்டார்கள் என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தொலைபேசியில் போலீசர் அல்லது வங்கி அதிகாரி என கூறி தொடர்பு கொண்டாலோ, வீடு புகுந்தாலோ உடனே தொடர்பை நிறுத்தி 117 என்ற அவசர எணுக்கு தகவல் தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், குறிப்பாக முதியவர்களை குறிவைத்து நடைபெறும் இத்தகைய மோசடிகளைப் பற்றி அனைவரும் தங்கள் குடும்பத்தினரையும் சுற்றத்தினரையும் எச்சரிக்க வேண்டும் என்பதையும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
© Kapo Freiburg