போலி கடிதங்கள் புழக்கத்தில் – மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் தற்போது, கிரிப்டோ வாலெட் நிறுவனமான ‘லெட்ஜர் (Ledger)’ என்ற பெயரில் மோசடிக்காரர்கள் போலி கடிதங்களை வீடுகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்த கடிதங்களில், பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகக் கூறி, உடனடியாக உங்கள் வாலெட்டை அப்டேட் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
அதற்காக, ஒரு QR குறியீடு கொடுத்து, அதை ஸ்கேன் செய்யுமாறு பயனர்களை வலியுறுத்துகின்றனர். இந்த மோசடி முயற்சி குறித்து Swiss Cybercrime Police (cybercrimepolice.ch) பொதுமக்களுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடிக்காரர்கள், QR குறியீட்டின் மூலம் பயனரின் வாலெட்டில் இருக்கும் மிக முக்கியமான 24 வார்த்தைகள் கொண்ட Seed Phrase மறுசீரமைப்பு குறியீட்டை திருட முயல்கின்றனர். இந்த தகவல்களை பெறுவதன் மூலம், அவர்கள் அந்த வாலெட்டின் முழுமையான கட்டுப்பாட்டையும் கைப்பற்றி, உள்ள கிரிப்டோ தொகைகளைத் திருட முடியும். இது மிக ஆபத்தான ஒரு இணைய மோசடி வடிவமாகும்.

பொதுமக்கள் இந்த வகை கடிதங்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். எந்தவொரு QR குறியீடும் ஸ்கேன் செய்யக் கூடாது; அனுப்பியுள்ள இணையதள இணைப்புகள் அல்லது செய்திகளை கிளிக் செய்யக் கூடாது. உங்கள் வாலெட்டில் நுழைய விரும்பினால், உத்தியோகபூர்வ Ledger இணையதளத்தில் சென்று மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே QR குறியீட்டை ஸ்கேன் செய்திருக்கிறீர்கள் என்றால், உடனடியாக Ledger நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் பணத்தை ஒரு புதிய பாதுகாப்பான வாலெட்டிற்கு மாற்றுங்கள். மேலும், அருகிலுள்ள காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் செய்யுங்கள்.
இந்த முயற்சி வெறும் நிதி இழப்பு மட்டுமல்ல, உங்கள் தனிப்பட்ட கிரிப்டோ பாதுகாப்புக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். Seed Phrase போன்ற தகவல்களை எந்த நிறுவனமும் உங்களிடம் கேட்காது என்பதையும் நினைவில் வையுங்கள். உங்கள் கிரிப்டோ பாதுகாப்பு உங்கள் கையில்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
@Keystonesda