ஜெனீவாவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ்; மக்கள் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தின் Geneva கன்டோனில், திடீரென 100க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளை காலி செய்யுமாறு அனுப்பப்பட்ட நோட்டீஸ் காரணமாக, அங்கு வசித்து வரும் மக்கள் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜெனீவா நகரில் உள்ள Boulevard Carl-Vogt பகுதியில் அமைந்துள்ள 100க்கும் அதிகமான அடுக்குமாடிக் குடியிருப்புகளையும், அதனுடன் சேர்த்து 15 வணிகக் கடைகளையும் காலி செய்யுமாறு கட்டிட உரிமையாளர்கள் தரப்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களில் புதுப்பிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்பதே அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்ட காரணமாகும்.
ஆனால், இந்த விளக்கம் பல குடியிருப்பாளர்களை திருப்திப்படுத்தவில்லை. பல ஆண்டுகளாக, சிலர் தசாப்தங்களாகவே, இந்தக் கட்டிடங்களில் வசித்து வரும் மக்கள், தங்களை வெளியேற்றிய பின்னர் அதிக வாடகைக்கு புதிய குடியிருப்பாளர்களுக்கு கட்டிடங்களை வழங்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சந்தேகிக்கின்றனர். இதனால், அந்தப் பகுதியில் வசிக்கும் குடும்பங்களிடையே கோபமும், அநீதியடைந்த உணர்வும் அதிகரித்துள்ளது.

ஜெனீவா கன்டோனில் நடைமுறையில் உள்ள சட்டங்களின் அடிப்படையில், இத்தகைய நோட்டீஸ்களுக்கு எதிராக குடியிருப்பாளர்கள் நீதிமன்றத்தை அணுகும் உரிமை பெற்றுள்ளனர். இருப்பினும், சட்டப்போராட்டம் மேற்கொண்டாலும், தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக அமையும் என்பதற்கு உறுதியான உத்தரவாதம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
வீட்டு வசதி பற்றாக்குறை மற்றும் உயர்ந்து வரும் வாடகைச் சுமை போன்ற பிரச்சினைகள் ஏற்கனவே ஜெனீவாவில் கடுமையாக உள்ள நிலையில், இந்த திடீர் வெளியேற்ற அறிவிப்பு சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
©wrs