அமெரிக்க கோடீஸ்வரருக்கு விருந்தாகிய சுவிஸ் இளம்பெண்கள் : வெளியாக பகீர் தகவல்கள்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள “எப்ஸ்டீன் கோப்புகள்” எனப்படும் ஆவணங்கள், உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது சுமத்தப்பட்ட பாலியல் சுரண்டல், மனிதக் கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களாக இவ்வாவணங்கள் வெளியாகி வருகின்றன.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களை பல்வேறு சக்திவாய்ந்த நபர்களுக்கு “விருந்தாக்கியவர்” என குற்றஞ்சாட்டப்பட்ட எப்ஸ்டீனின் வலைப்பின்னல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் உயர்மட்ட அரசியல், அரச குடும்பம், தூதரக வட்டாரங்கள் வரை விரிந்திருந்தது என்பதே இந்த ஆவணங்களின் மூலம் தெளிவாகிறது. இந்த கோப்புகளில் பெயர் இடம்பெற்றுள்ளதால், அமெரிக்க முன்னாள் மற்றும் தற்போதைய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ, அவரது முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசன், மேலும் அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதர் பீற்றர் மாண்டல்சன் போன்றோர் அடங்குகின்றனர்.

இந்நிலையில், எப்ஸ்டீனுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் தொடர்பு இருந்ததாக வெளியாகியுள்ள தகவல், அந்நாட்டிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆவணங்களின்படி, சூரிக், ஜெனீவா மற்றும் Verbier ஆகிய நகரங்களில் உள்ள சில நபர்களுடன் எப்ஸ்டீன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சுவிஸ் இளம்பெண்களை வேலை பயிற்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக விமான டிக்கெட், ஹொட்டலில் தங்குவதற்கான செலவு, விசா உள்ளிட்டவற்றுக்கு எப்ஸ்டீன் பண உதவி செய்ததாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அவர் சுவிட்சர்லாந்து வந்தபோதெல்லாம், அவருக்கு பெண்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன.
ஆனால், இவ்வாறு தொடர்பில் இருந்த பெண்களில் எத்தனை பேர் எப்ஸ்டீனின் குற்றச்செயல்களால் நேரடியாக பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இந்த ஆவணங்கள் வெளியானதன் மூலம், எப்ஸ்டீனின் சர்வதேச வலைப்பின்னல் எவ்வளவு பரந்தது என்பதும், பல நாடுகளின் உயர்மட்ட வட்டாரங்களை அது எவ்வாறு சென்றடைந்தது என்பதும் மீண்டும் ஒரு முறை உலக கவனத்தை ஈர்த்துள்ளது.