ஆர்காவ் மாகாணத்தில் ஒரு டன் கடத்தல் இறைச்சி மற்றும் 6,000 கஞ்சா செடிகள் பறிமுதல்
சுவிஸின் ஆர்காவ் மாகாணத்தில் உள்ள லென்ஸ்பர்க் பகுதியில் சுங்க மற்றும் எல்லைப்பாதுகாப்பு கூட்டுப்பிரிவு (BAZG) அதிகாரிகள், கன்டோன் காவல்துறையின் உதவியுடன் மேற்கொண்ட வீட்டு சோதனையில் பெரும் அளவிலான கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனையின் போது அதிகாரிகள் சுமார் ஒரு டன் இறைச்சி, 6,000 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்லைப்பாதுகாப்பு கூட்டுப்பிரிவு அமைப்பு மேற்கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட இறைச்சி கடத்தல் விசாரணையின் ஒரு பகுதியாக, லென்ஸ்பர்க் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக் கட்டிடத்தில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு கடத்தப்பட்ட இறைச்சி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் சுமார் 1,000 கிலோ கிராம் இறைச்சி — பெரும்பாலும் கன்றிறைச்சி — பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் விசாரணையின் போதில் அதிகாரிகள் எதிர்பாராத வகையில் ஒரு பெரிய சட்டவிரோத கஞ்சா தோட்டத்தையும் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் 6,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் இருந்த ஒருவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் நபர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சுவிஸ் சுங்கத்துறை சமீப மாதங்களில் கடத்தல் இறைச்சி மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் பல இடங்களில் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதிகாரிகள் கூறுவதாவது, இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், குறிப்பாக உணவு பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்தை அச்சுறுத்தும் செயல்களுக்கு எந்தவித தளர்வும் வழங்கப்படமாட்டாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
© BAZG