சுவிட்சர்லாந்தில் முகமூடி தடைக்கு பின்னர் விதிக்கப்பட்ட அபராதங்கள்
சுவிட்சர்லாந்தில் பல ஆண்டுகால விவாதங்களுக்கும், டிசினோவில் நடைபெற்ற முன்னோடி திட்டங்களுக்கும் பின், 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே “முகத்தை மறைக்கும் சட்டம்” நடைமுறைக்கு வந்தது. பொதுமக்கள் இடங்களில் முகத்தை முழுமையாக மூடுபவர்கள் 100 முதல் 1000 ஃபிராங்க் வரை அபராதம் கட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. இது 2021ஆம் ஆண்டு சுவிஸ் மக்களால் ஏற்கப்பட்ட புர்கா தடை சட்டத்தின் நடைமுறைப்படுத்தலாகும்.
சுற்றுலா காலத்திலும் குறைந்த அபராதங்கள்
சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், நாட்டில் பெருமளவில் அபராதங்கள் விதிக்கப்படவில்லை. சில தனிப்பட்ட சம்பவங்களில் மட்டுமே நகரங்கள் மற்றும் கண்டோன்கள் அபராதம் விதித்துள்ளன. சட்டம் கொண்டு வரப்பட்டபோதே, சுவிட்சர்லாந்தில் புர்கா அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது, இந்த தடை பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பெண்களைப் பாதிக்கும் என சுவிஸ் கூட்டாட்சிக் கவுன்சில் குறிப்பிட்டிருந்தது.
இந்த ஆண்டு கோடை சுற்றுலா காலம் முடிவடைந்த நிலையில், எதிர்பார்த்தபடி பெரிய மாற்றம் எதுவும் இல்லை. வளைகுடா நாடுகளில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் சுவிட்சர்லாந்துக்கு வந்திருந்தாலும், விதிக்கப்பட்ட அபராதங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.
20min
பெர்ன், சூரிக் மற்றும் பிற கண்டோன்களில் நிலைமை
பெர்ன் கண்டோனில் ஜனவரி முதல் மூன்று அபராதங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று சுற்றுலா பகுதியான ஓபர்லாந்தில் (Interlaken, Grindelwald போன்ற இடங்கள்) பதிவு செய்யப்பட்டது. கிரௌவுண்டன் மற்றும் வாலிஸ் கண்டோன்களில் இதுவரை எந்த விதிமீறல்களும் பதிவாகவில்லை. சூரிச் நகரத்தில் ஏப்ரல் மாதத்திற்குள் நான்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், கண்டோன் அதிகாரிகள் தற்போது நடந்து வரும் பாராளுமன்ற விவாதங்களின் காரணமாக சமீபத்திய எண்களை வெளிப்படுத்த மறுத்துள்ளனர்.
சட்டத்தில் உள்ள பிழை – முகக்கவசம் வழியாக தப்பிக்கும் முயற்சிகள்
அபராதங்கள் குறைவாக உள்ளதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, பல சுற்றுலாப் பெண்கள் முகமூடியை முற்றிலும் அகற்றாமல், மருத்துவக் காரணத்திற்காக அனுமதிக்கப்பட்ட முகக்கவசம் (mask) மற்றும் தலைப்பாகை (scarf) சேர்த்து அணிவதன் மூலம் சட்டத்தைத் தவிர்க்கின்றனர். பெர்ன் காவல்துறை தெரிவித்ததாவது:
“இன்னும் பலர் மருத்துவ காரணம் எனக் கூறி முகக்கவசம் அணிந்து வருகின்றனர். இது உண்மையில் தடை சட்டத்திலிருந்து தப்பிக்கப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை நிரூபிப்பது கடினம்; எனவே அபராதம் விதிக்க இயலாது.” என தெரிவிக்கின்றனர்.