சுவிட்சர்லாந்தில் சாலை விபத்துகள் ஆபத்தான அளவில் உயர்வு – ஐந்து ஆண்டுகளில் 34% அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 34 சதவீதம் உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 250 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதனால், சுவிட்சர்லாந்து தற்போது ஐரோப்பாவில் சாலை மரண விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சுவிட்சர்லாந்தில் மாறாக அது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது நிபுணர்களிடையே கடுமையான கவலைக்குரிய விடயமாக உள்ளது.
சுவிஸ் சாலை விபத்து தடுப்பு கவுன்சில் (BFU) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் அரசும், போக்குவரத்து துறையும் மேற்கொண்ட முயற்சிகள் போதிய பலனளிக்கவில்லை என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “இந்த எதிர்மறை போக்கை மாற்ற ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு கொள்கையும், சாரதிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவரின் உறுதியான பங்களிப்பும் தேவை,” என BFU வின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுவிஸ் சாலை விபத்து பிரிவின் தலைவரான மாரியோ காவெக்ன் (Mario Cavegn) கூறியதாவது: “சாலை பாதுகாப்பை மேம்படுத்த பல பயனுள்ள நடவடிக்கைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த அரசியல் தன்னாட்சி மற்றும் உறுதியான முடிவு அவசியம்.”
சுவிட்சர்லாந்து அரசு 2030க்குள் வருடாந்திர சாலை மரண எண்ணிக்கையை 100 ஆகக் குறைக்கும் இலக்கை நிர்ணயித்திருந்தாலும், தற்போதைய நிலைமையில் அந்த இலக்கை அடைவது கடினம் எனவும் காவெக்ன் எச்சரித்தார்.
நிபுணர்கள் கூறுவதாவது, அதிக வேகம், கவனக்குறைவான ஓட்டுநர்கள், மதுபோதையில் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதி மீறல்கள் ஆகியவை சுவிட்சர்லாந்தில் விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இதனைத் தடுக்க போக்குவரத்து கண்காணிப்பு, தண்டனைச் சட்டங்கள் மற்றும் மக்களிடையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த புள்ளிவிவரங்கள், சுவிட்சர்லாந்து அரசு சாலை பாதுகாப்பை மீளாய்வு செய்ய வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்துவதோடு, பொதுமக்கள் விழிப்புணர்வும் அதே அளவு முக்கியமானது என்பதை நினைவூட்டுகின்றன.