சுவிசில் ரசாயனம் மற்றும் மருந்துத் துறையில் விற்பனை 8 சதவீதம் வீழ்ச்சி.!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த சுங்கக் கட்டணங்கள் சுவிஸ் பொருளாதாரத்தில் எதிர்பார்த்தபடியே கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சுவிட்சர்லாந்தின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (BIP) முன்காலாண்டுடன் ஒப்பிடும்போது 0.5 சதவீதம் குறைந்திருப்பதாக மாநில பொருளாதாரச் செயலாளர் அலுவலகமான Seco அறிவித்துள்ளது. இதன் மூலம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட அவர்களின் தொடக்க மதிப்பீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரை குறிப்பாக இரசாயன-மருந்தியல் துறை 7.9 சதவீதம் வரை குறைவு கண்டுள்ளது. சுவிஸ் ஏற்றுமதிகளில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் துறையாக இருப்பதால், இந்த வீழ்ச்சி பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Seco வழங்கிய விளக்கப்படி, இந்த சரிவு திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. அமெரிக்கா சுங்கக் கட்டணங்களை விதிக்கலாம் என்ற முன்னெச்சரிக்கையால், கடந்த காலாண்டுகளில் இந்த துறையினர் அதிகளவில் சரக்குகளை குவித்து வைத்திருந்தனர். இதன் காரணமாக முன்னர் ஏற்றுமதி பெரிதும் உயர்ந்தது. ஆனால் கையிருப்புகள் நிரம்பிய நிலையில் தற்போதைய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இயல்பாகவே குறைந்துள்ளது.

2024ஆம் ஆண்டில் சுவிஸ் மொத்த ஏற்றுமதியின் 52 சதவீதத்தை இரசாயன மற்றும் மருந்தியல் பொருட்களே வழங்கியிருந்தன. எனவே இந்த துறையில் ஏற்பட்ட சற்றே பெரிய வீழ்ச்சி நாட்டின் முழு பொருளாதார நிலைமைக்கே சவாலாக அமைந்துள்ளது.
சுவிஸ் பொருளாதாரத்தின் மந்தநிலை தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி 0.2 சதவீதமாக தள்ளாடியிருந்த நிலையில், முதல் காலாண்டில் அது 0.8 சதவீதம் உயர்வைப் பதிவு செய்தது. இதனால் சுவிட்சர்லாந்து தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தம் நீண்டகால விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.