டிரம்பின் சமாதான சபையை நிராகரிக்குமாறு சுவிஸ் அரசிடம் கோரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள ‘சமாதான சபை’ (Board of Peace) அமைப்பில் சேரும் அழைப்பை, சுவிஸ் அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் வெளிநாட்டுத்துறை அமைச்சர் மிசெலின் கால்மி-ரே வலியுறுத்தியுள்ளார்.
உலக பொருளாதார மன்றம் (WEF) மாநாட்டில் டிரம்ப் சுவிஸ் அரசையும், நிதி அமைச்சர் காரின் கெல்லர்-சுட்டரையும் அவமதித்த போதிலும், அதற்குப் பின்னர் நடந்த அதிகாரபூர்வ சந்திப்புகளில் இந்த விவகாரம் எடுத்துரைக்கப்படாதது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவமதிப்பு வார்த்தைகளையே பெரும் பிரச்சினையாக மாற்ற வேண்டியதில்லை என்றும், சக்திவாய்ந்த நாடுகளை தூண்டுவது சுவிஸ் நலனுக்கு ஏற்றதல்ல என்றும் அவர் கூறினார்.

ஆனால், கிரீன்லாந்து தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட சர்ச்சையான கருத்துகளுக்கு எதிராக, சுவிஸ் அரசு சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும் என கால்மி-ரே வலியுறுத்தினார். ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து சுவிஸ் அரசு குரல் கொடுக்க வேண்டியிருந்ததாகவும், அமெரிக்காவுடன் உள்ள சுங்க வரி பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தால் அரசு அமைதியாக இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையில், வெளிநாட்டுத்துறை அமைச்சர் இக்னாசியோ காசிஸ், கிரீன்லாந்து சர்வதேச சட்டப்படி டென்மார்க்கின் ஒரு பகுதியாகும் என தெரிவித்துள்ள நிலையில், டிரம்பின் ‘சமாதான சபை’ யோசனையை ஆய்வு செய்யலாம் என கூறியுள்ளார். இதற்கு கால்மி-ரே வெளிப்படையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.