சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தக் கோரி அரசியல் கட்சி ஒன்று பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது. அந்த பிரேரணை மக்களிடையே பெருமளவில் கவனம் ஈர்த்துவருவதைத் தொடர்ந்து, அரசுக்கு கவலை உருவாகியுள்ளது.
புலம்பெயர்தல் குறித்த மாறும் எண்ணங்கள்
பழைய காலங்களில், ஒரு நல்ல ஊதியத்துக்காக, மக்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வதுண்டு. அப்படி வேலைக்கு செல்பவர்கள் அங்கேயே குடியமர்ந்துவிடுவதும் உண்டு. அந்த வழக்கம் இப்போதும் நீடிக்கிறது.
சில நாடுகள், குறிப்பிட்ட சில பணிகளுக்காக வெளிநாட்டவர்களையே நம்பி இருந்தன. இப்போதும் சில நாடுகளில் அந்த நிலை உள்ளது. ஜேர்மனி போன்ற நாடுகளில் பெருமளவில் வெளிநாட்டவர்கள், அல்லது, புலம்பெயர்ந்தோர்தான் மருத்துவர்களாக இருக்கிறார்கள்.

முன்னர் சில நாடுகள் தற்காலிக வேலைகளான பழம் பறித்தல் போன்ற வேலைகளுக்கு வெளிநாட்டவர்களை நம்பி இருந்த நிலையில், சில நாடுகள் இப்போதும் தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக புலம்பெயர்ந்த திறன்மிகுப் பணியாளர்களை நம்பியிருக்கும் நிலை உள்ளதையும் யாராலும் மறுக்கமுடியாது.
ஆனால், சமீப காலமாக புலம்பெயர்ந்தோர் தங்கள் இளைஞர்களின் வேலைகளைப் பறித்துக்கொள்கிறார்கள், அவர்களால் வீடுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது, அவர்கள் மருத்துவர்களைக் காணச் செல்வதால் உள்நாட்டு மக்கள் மருத்துவர்களை சந்திக்க காலதாமதம் ஏற்படுகிறது என்றெல்லாம் சில நாடுகளின் மக்கள் எண்ணத் துவங்கியுள்ளார்கள்.
சில நாடுகளில் அரசாங்கங்களே அந்த எண்ணங்களை வளர்த்துவிடுவதுபோல செயல்படுகின்றன. புலம்பெயர்தலுக்கு எதிராக நடவடிக்கைகளும் எடுத்துவருகின்றன. அதேநேரத்தில் சுவிஸ் அரசு, புலம்பெயர்தலுக்கு ஆதரவாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.