சுவிட்சர்லாந்தில் மீண்டும் ‘கரோலினா ரீப்பர்’ மிளகாய் சவால் அச்சுறுத்தல் – சிறுவர்களுக்கு கடும் அபாய எச்சரிக்கை
உலகிலேயே அதிக காரமுள்ளதாகக் கருதப்படும் ‘கரோலினா ரீப்பர்’ மிளகாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி மற்றும் சுவிஸ் பள்ளிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மிளகாயை உண்ணும் சவாலில் பங்கேற்ற பலர் ஜெர்மனியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதோடு, சுவிட்சர்லாந்தின் சில பள்ளிகளிலும் இந்த சவால் பயத்தை கிளப்பியது.
இதே சவால் மீண்டும் இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் தலைதூக்கி இருக்கிறது. குறிப்பாக, சில ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் இந்த மிகக் காரமான மிளகாயை ஸ்நாக்ஸ் வடிவில் விற்பனை செய்து வருகின்றன. வயது வரம்பு எதுவும் இல்லாததால், யார் வேண்டுமானாலும் இவை எளிதில் வாங்கக்கூடிய நிலை உள்ளது. இதனால், குறைந்த வயதிலுள்ள சிறுவர்கள் கூட ஆபத்தான அளவிலான காரத்தை உட்கொள்ளும் சாத்தியம் அதிகரித்துள்ளது.

மேலும், சமூக ஊடகங்களில் இந்த மிளகாயை உண்ணும் ‘சவால் வீடியோக்கள்’ தற்போது மீண்டும் பரவி வருகின்றன. குறிப்பாக, இளம் வயதினரை குறிவைத்து சவாலில் கலந்து கொள்ள ஊக்குவிக்கும் பதிவுகள் அதிகரித்திருப்பது நிபுணர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கையில், கரோலினா ரீப்பர் போன்ற மிக அதிக காரத்தைக் கொண்ட மிளகாயை உட்கொள்வது சிறுவர்களுக்கு மிகுந்த அபாயம் விளைவிக்கக்கூடும் என கூறப்படுகிறது. இது கடுமையான வாய்வு எரிச்சல், கட்டுப்படுத்த முடியாத வயிற்றுப்பிடிப்பு, வாந்தி, மற்றும் சில சமயங்களில் மயக்கத்தையும் ஏற்படுத்தும். அதிக காரத்தால் மூச்சு திணறல் அல்லது ஆலர்ஜி போன்ற கடுமையான அறிகுறிகளும் தோன்ற வாய்ப்புள்ளது.
தற்போது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் பள்ளிகள் கூட இந்த சவால் மீண்டும் பரவாமல் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.