சூரிச் மாநிலத்தில் இளைஞர்களின் ஹாலோவீன் விருந்தில் வன்முறை : பலர் காயம்
சூரிச் மாநிலத்தின் (Meilen) மைய்லென் பகுதியில் நடந்த ஒரு ஹாலோவீன் கொண்டாட்டம் எதிர்பாராத விதமாக வன்முறை நிறைந்த இரவாக மாறியது. ஆரம்பத்தில் சில இளைஞர்கள் நடத்திய சுலபமான விருந்தாக இருந்த இது, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அழைப்பிதழ் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதுடன் சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறியது
(20 Minuten) “சுவான்சிக் மினுட்டன்” இணையதளத்துக்கு தெரிவித்த பலர், Pepper Spray கொண்டு தாக்கப்பட்டதாகவும், பல இடங்களில் சண்டைகள் வெடித்ததாகவும் கூறினர். நிகழ்வில் 60 முதல் 150 பேர் வரை கலந்து கொண்டதாக மதிப்பிடப்படுகிறது. ஆனால் ஏற்பாட்டாளர் ஒருவர், இரவு 10 மணிக்கு பிறகு தன்னறியாதவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை; இதனால் வெளியே இருந்த இளைஞர்களிடையே கோபமும் பதற்றமும் அதிகரித்து வன்முறையாக மாறியது என தெரிவித்தார்..
இணையத்தில் வெளியான வீடியோக்களில், சில இளைஞர்கள் சாலையின் நடுவே அவர்களின் உடைகளை கழற்ற வலுக்கட்டாயப்படுத்தப்பட்டதும் பின்னர் கொள்ளையடிக்கப்பட்டதும் காணப்படுகிறது. “திடீரென்று அவர்கள் Pepper Sprayபயன்படுத்தத் தொடங்கினர். சுவாசிக்க முடியாமல் கண்களில் எரிச்சல் ஏற்பட்டது,” என்று மூன்று இளைஞர்கள் தெரிவித்தனர். அவர்களில் ஒருவரை ஐந்து பேர் தாக்கியதாகவும், மூக்கில் இரத்தம் வெளியேறியதுடன் முகத்தில் வீக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மைய்லென் காவல் துறை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், 15 வயது சிறுவன் ஒருவர் தலையில் அடிபட்டு காயமடைந்ததாகவும், அவருக்கு மனடார்ஃப் (Mannedorf) மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயது சோமாலி இளைஞர் ஒருவரும், 18 வயது லாட்ட்விய நாட்டு இளைஞர் ஒருவரும் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், சுவிஸில் இளைஞர்கள் மத்தியில் சமீப ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் வழியே விரைவாக பரவும் ‘அனுமதியற்ற விருந்துகள்’ எவ்வாறு ஆபத்தாக மாறக்கூடும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறது.
© KeystoneSDA