சுவிஸ் அதிகாரிகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சுவிஸ் நாட்டின் மூத்த அதிகாரிகளுடன் வர்த்தக மற்றும் வர்த்தக சமநிலையின்மை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தனது ‘ட்ருத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் எழுதிய பதிவில், “மிகச் சிறப்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை” எனக் குறிப்பிடுவதுடன், தனது வர்த்தக பிரதிநிதி ஜேம்சன் கிரியர் (Jamieson Greer) சுவிஸ் தலைவர்களுடன் தொடர்ந்தும் ஆலோசனைகளை மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுவிஸ் அரசாங்கம் இதுவரை அந்த சந்திப்பு குறித்தோ, கலந்து கொண்ட பிரதிநிதிகள் குறித்தோ எந்த உத்தியோகபூர்வமான கருத்தையும் வெளியிடவில்லை.

டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் தற்போதைய வர்த்தக கொள்கைகள் சுவிட்சர்லாந்தின் பல துறைகளுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கடிகாரங்கள், இயந்திரங்கள், சாக்லேட் மற்றும் சீஸ் போன்ற சுவிஸ் தயாரிப்புகள் மீது அமெரிக்கா 39 சதவீதம் வரை வரி விதித்துள்ளது.
இது அமெரிக்கா தனது எந்தவொரு வர்த்தக கூட்டாளர்மீதும் விதித்துள்ள மிக உயர்ந்த சுங்க விகிதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பொருளாதார நிபுணர்கள், இந்த நிலைமை சுவிஸ் ஏற்றுமதி துறைக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், இரு நாடுகளின் வர்த்தக உறவில் பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
© WRS