டாவோஸில் அமெரிக்காவுடன் வரி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக சுவிஸ் தலைவர் அறிவிப்பு
சுவிட்சர்லாந்து அதிபர் கீ பார்மலின், உலக பொருளாதார மன்றம் நடைபெறும் டாவோஸில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். டாவோஸில் நடைபெறவுள்ள இந்த முக்கிய சர்வதேச மாநாட்டில், அமெரிக்கா சார்பில் ட்ரம்ப் தலைமையில் பெரிய அளவிலான பிரதிநிதிகள் குழு பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Guy Parmelin, டாவோஸுக்கு செல்லும் சுவிஸ் அரசின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார். அவருடன் வெளிவிவகார அமைச்சர் Ignazio Cassis (இக்னாசியோ காசிஸ்), நிதியமைச்சர் Karin Keller-Sutter மற்றும் பாதுகாப்பு அமைச்சர் Martin Pfister ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
“அமெரிக்க தரப்பு தயாராக இருந்தால், டாவோஸிலேயே பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அப்போது முடிவுகள் மிக விரைவாக எடுக்கப்பட வாய்ப்புள்ளது” என பார்மலின், Le Temps நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், புதன்கிழமை சுவிஸ் கூட்டாட்சி அரசு (Federal Council) வரி விதிப்புகள் தொடர்பான இறுதியான பேச்சுவார்த்தை அதிகாரத்தை ஒப்புதல் வழங்கியுள்ளதால், அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை முன்னெடுக்க சுவிஸ் அரசு முழுமையாக தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், கடந்த நவம்பரில், பெரும் கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, பெர்ன் மற்றும் வாஷிங்டன் இடையே ஒரு முக்கிய உடன்பாடு எட்டப்பட்டது. அதன் அடிப்படையில், சுவிஸ் தயாரிப்புகளுக்கு அமெரிக்கா விதித்து வந்த 39 சதவீத வரியை 15 சதவீதமாக குறைக்க அமெரிக்கா சம்மதித்துள்ளது. ஆனால், இந்த சலுகை நடைமுறைக்கு வர, மார்ச் 31க்குள் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் அரசியல், பொருளாதார தலைவர்கள் ஒன்று கூடும் World Economic Forum மாநாடு, ஜனவரி 19 முதல் 23 வரை டாவோஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு, சுவிஸ்–அமெரிக்க வர்த்தக உறவுகளில் புதிய திருப்புமுனையை உருவாக்கக் கூடும் என அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
© KeystoneSDA