சுவிட்சர்லாந்து முழுவதும் தேசிய அவசர எச்சரிக்கை அமைப்பு நேற்று சோதனை செய்யப்பட்டது
சுவிட்சர்லாந்து முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய அவசர எச்சரிக்கை அமைப்பு நேற்று பிற்பகல் வழக்கமான வருடாந்திர சோதனைக்காக இயக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் முதல் புதன்கிழமையன்று இந்த சோதனை நடத்தப்படுவது வழக்கம் ஆகும்.
இந்த ஆண்டு சோதனை நேற்று பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள சுமார் 5,000 நிலையான சைரன்களும் 2,200 மொபைல் சைரன்களும் ஒரே நேரத்தில் ஒலிக்கப்பட்டன. அதே நேரத்தில் Alertswiss செயலியில் உள்ள தகவல் பரிமாற்ற சேனல்களும் சோதனை செய்யப்பட்டது.

மக்களை உடனடி அவசர நிலை அல்லது பேரிடர் அபாயம் குறித்து எச்சரிப்பதற்காக பயன்படுத்தப்படும் முதன்மை சைரன், ஒரு நிமிடம் நீடிக்கும் ஒரே மாதிரியான ஏற்றத் தாழ்வான ஒலியுடன் ஒலிக்கப்பட்டது. இது அவசர சூழ்நிலைகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய முக்கிய சிக்னலாகும்.
அதேபோல், அணைகள் அருகே வசிக்கும் மக்களுக்கு நீர்சார்ந்த அபாயங்களை முன்னறிவிக்கும் இரண்டாவது எச்சரிக்கை சைரனும் சோதனை செய்யப்பட்டது. இந்த சிக்னல், 10 விநாடி இடைவெளியில் 20 விநாடிகள் நீடிக்கும் 12 தொடர் ஒலிகளாக ஒலிக்கப்பட்டது.
இந்த சோதனை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே நடைபெற்றதாகவும், பொதுமக்கள் எந்தவித அச்சமும் அடைய வேண்டியதில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவசர காலங்களில் மக்களை விரைவாகவும் துல்லியமாகவும் எச்சரிக்க இந்த அமைப்பு முழுமையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்வதே இந்த வருடாந்திர சோதனையின் முக்கிய நோக்கமாகும்.