சுவிஸில் சைபர் தாக்குதல் அறிவிப்பு சட்டம் – முதல் ஆறு மாதங்களில் 164 சம்பவங்கள்
சுவிஸில் முக்கிய அடிப்படை வசதிகள் மீது நடக்கும் சைபர் தாக்குதல்கள் கட்டாயமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த காலப்பகுதியில் 164 தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக சுவிஸ் கூட்டாட்சி சைபர் பாதுகாப்பு அலுவலகம் (UFCS) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பதிவான தாக்குதல்களில் அதிகம் இடம்பெற்றது DDoS தாக்குதல்கள் (18.1%) ஆகும். இதனை தொடர்ந்து ஹேக்கிங் (16.1%), ரான்சம்வேர் (12.4%), உள்நுழைவு விவரங்கள் திருட்டு (11.4%), தரவு கசிவு (9.8%) மற்றும் மால்வேர் (9.3%) சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பல தாக்குதல்கள் ஒரே நேரத்தில் பல்வேறு முறைகளில் நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகள் நிதி துறை (19%), தகவல் தொழில்நுட்பம் (8.7%) மற்றும் ஆற்றல் துறை (7.6%) ஆகும். மேலும், அரசு அலுவலகங்கள், சுகாதாரத் துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அஞ்சல் சேவைகள், போக்குவரத்து, ஊடகம், உணவுப் பொருள் விநியோகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

சட்டத்தின் படி, இவ்வாறான தாக்குதல்கள் 24 மணி நேரத்துக்குள் UFCS-க்கு அறிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் புள்ளிவிபர ஆய்வுகளுக்கும், எதிர்காலத்தில் பிற நிறுவனங்களுக்கு ஏற்படும் சாத்தியமான அபாயங்களை முன்கூட்டியே கணிக்கவும் பயன்படுகின்றன. அலுவலகம், இதுவரை பல்வேறு நிறுவனங்களிடையே நல்ல ஒத்துழைப்பும் நம்பிக்கையும் நிலவுவதாக பாராட்டியுள்ளது.
அக்டோபர் மாதத்திலிருந்து, தாக்குதல் சம்பவங்களை அறிவிக்க தவறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தகவல் பாதுகாப்பு கூட்டாட்சி சட்டத்தின் கீழ், இது அதிகபட்சம் 100,000 சுவிஸ் ஃபிராங்க் வரை அபராதமாக இருக்கலாம். UFCS எதாவது நிறுவனம் அறிவிக்காமல் விட்டதாக சந்தேகப்படின் முதலில் அதனை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கும். ஆரம்ப தொடர்புக்கு பதில் அளிக்காத நிலையில்தான் அதிகாரப்பூர்வ புகார் பதிவு செய்யப்படும்.
இந்த சட்டம், சுவிஸின் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
© KeystoneSDA